மொஹாலி மைதானத்தில் ரன் குவிக்கலாம்-பவுலிங்கும் எடுபடும்: கியூரேட்டர்
மொஹாலி: மொஹாலி மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணியால் 270 முதல் 280 ரன்கள் வரை குவிக்க முடியும். ஆட்டத்தின் 2வது பாதியில் பந்து வீச்சு எடுபடும். ஒரு நாள் போட்டிக்கேற்ற சிறந்த பிட்ச் இது என்று மொஹாலி மைதான பிட்ச் கியூரேட்டர் தல்ஜீத் சிங் கூறியுள்ளார்.

ஒரு போட்டியை விட அந்தப் போட்டி நடக்கப் போகும் மைதானத்தின் பிட்ச்தான் மிகவும் முக்கியம். இந்திய பிட்ச்கள் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவைதான். பேட்டிங்குக்கும் சாதகமாகவே அவை அமைக்கப்பட்டிருக்கும். இருப்பினும் மொஹாலி பிட்ச் வேகப் பந்து வீச்சுக்கும் சாதகமானதாகும்.
பிட்ச் நிலவரம் குறித்து கியூரேட்டர் தல்ஜீத் சிங் கூறுகையில், இரு ஒரு நாள் போட்டிக்கேற்ற சிறப்பான பிட்ச். இங்கு ஒரு திரில்லிங்கான போட்டி நடைபெறுவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன. முதலில் பேட் செய்யும் அணியால் 280 ரன்கள் வரை சராசரியாக குவிக்கலாம். ஆட்டத்தின் பிற்பாதியில் பந்து வீச்சு எடுபடும்.
அதற்கேற்றவகையில் பந்து நன்கு எழுந்து செல்லும் வகையில் பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. வேகப் பந்து வீச்சுக்கு உகந்த பிட்ச் இது. பனியின் தாக்கத்தால் பந்து வீச்சு பாதிக்கப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இங்கு இரவு ஏழரை முதல் 8 மணியளவில் பனி விழ ஆரம்பிக்கிறது. பனியின் தாக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்படாது என்றே நம்புகிறோம்.
பிட்ச் குறித்து கேப்டன் டோணி கேட்டுக் கொண்டார். இந்த பிட்ச்சில் சராசரியாக எடுக்கப்பட்ட ஸ்கோர் குறித்தும் கேட்டார். இந்திய அணிக்காக பிரத்யேக கோரிக்கை எதையும் அவர் வைக்கவில்லை. பொதுவாகத்தான் கேட்டுக் கொண்டார் என்றார் சிங்.
வழக்கமாக பேட்டிங்குக்கு மட்டும் சாதககமாக இல்லாமல் பந்து வீச்சுக்கும் உகந்ததாக இந்த பிட்ச் அமைக்கப்பட்டுள்ளதால், போட்டி படு விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications