துபாய்: 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றபோதும், அந்த வெற்றிக்குப் பின் பரிசளிப்பு விழாவில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த விவகாரம் குறித்து தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரரும், மிஸ்டர் 360 என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான ஏபி டிவில்லியர்ஸ், இந்திய அணியின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியின் முடிவில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மோஷின் நக்வியின் கைகளில் இருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்ததாக கூறப்படுகிறது. அதனால் மோஷின் நக்வி வீம்புக்கு கோப்பையை எடுத்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்.

சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் பேசிய ஏபி டிவில்லியர்ஸ், இந்தச் சர்ச்சை உருவான விதம் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்தார். விளையாட்டையும் அரசியலையும் ஒருபோதும் ஒன்றாகக் கலக்கக் கூடாது என்பதை வலியுறுத்திய அவர், இந்திய அணியின் செயல்பாடு வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டார்.
"கோப்பையை யார் வழங்குகிறார்கள் என்பதில் இந்திய அணிக்கு அதிருப்தி இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், இதுபோன்ற விஷயங்களுக்கு விளையாட்டில் இடமில்லை என்று நான் நினைக்கிறேன். அரசியலைத் தனியாக வைத்திருக்க வேண்டும். விளையாட்டு என்பது வேறு, அதை அதன் இயல்புக்காகக் கொண்டாட வேண்டும். இதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை அவர்கள் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.
மேலும், இதுபோன்ற அரசியல் சார்ந்த நிகழ்வுகள், வீரர்களுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தையும், கடினமான சூழலையும் உருவாக்குகின்றன என்றும் டிவில்லியர்ஸ் சுட்டிக்காட்டினார். "இதுபோன்ற சம்பவங்கள், கிரிக்கெட் வீரர்களை மிகவும் கடினமான நிலையில் நிறுத்துகின்றன. அதைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. பரிசளிப்பு விழாவின் இறுதியில் நடந்தவை மிகவும் சங்கடமாக இருந்தன" என்று தனது வேதனையைப் பதிவு செய்தார்.
ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக விளையாடி, இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் டிவில்லியர்ஸின் இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில இந்திய ரசிகர்கள் அவரது கருத்தை விமர்சித்து வருகின்றனர்.
ஆசிய கோப்பைத் தொடர் முழுவதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதற்றம், கிரிக்கெட்டையும் மறைத்து நிழலாடியது. தொடரில் ஒரு போட்டியில் கூடத் தோற்காமல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றபோதும், களத்தில் வீரர்கள் கை குலுக்கிக் கொள்ளாதது போன்ற நிகழ்வுகளே அதிகம் பேசப்பட்டன.
எனினும், இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், இந்திய டி20 அணியின் செயல்பாடுகளை டிவில்லியர்ஸ் பாராட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்துப் பார்க்கும்போது, இந்திய அணி மிகவும் வலுவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
"மிக முக்கியமான விஷயமான கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவோம். இந்திய அணி மிகவும் வலுவாகத் தெரிகிறது. திறமையான வீரர்கள் பலர் அணியில் உள்ளனர். முக்கியமான தருணங்களில் சிறப்பாக விளையாடுகிறார்கள். அதைப் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது" என்று அவர் இந்திய அணியைப் பாராட்டினார்.