கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில், பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பயம் பும்ராவோ அல்லது சூர்யகுமார் யாதவோ கிடையாது. அவர்களின் ஒட்டுமொத்த திட்டத்தையும் தவிடுபொடியாக்கும் வல்லமை கொண்ட அபிஷேக் சர்மாதான் பாகிஸ்தானின் முதல் எதிரியாகப் பார்க்கப்படுகிறார். அபிஷேக் இந்தப் போட்டியில் விளையாடினால் பாகிஸ்தானின் வியூகம் பவர்பிளேவிலேயே முடிவுக்கு வரும்.
இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கப் போவது, யார் ஆட்டத்தின் வேகத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்பதுதான். அந்த வகையில் இந்தியாவின் மிக முக்கிய ஆயுதமாக அபிஷேக் சர்மா திகழ்கிறார்.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு குறிப்பிட்ட வியூகத்தைக் கடைப்பிடித்து வருகிறது. அதாவது புதிய பந்தில் விக்கெட் வீழ்த்துவது, அதனைத் தொடர்ந்து நடு ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி எதிரணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்துவது. எதிரணியை மூச்சுத் திணற வைத்து வீழ்த்துவதே அவர்களின் பாணி. இதனால்தான் நசீம் ஷா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை அவர்கள் அதிகம் பயன்படுத்தவில்லை.
பாகிஸ்தானின் இந்தத் தற்காப்பு வியூகத்தை உடைக்கவே உருவாக்கப்பட்டவர் தான் அபிஷேக் சர்மா. இவர் வழக்கமான பேட்ஸ்மேன்களைப் போல இன்னிங்ஸை கட்டமைப்பவர் அல்ல, ஆட்டத்தின் போக்கையே மாற்றுபவர். இவர் களமிறங்கிச் சந்திக்கும் முதல் 12 பந்துகளிலேயே ஆட்டம் யார் பக்கம் என்பதைத் தீர்மானித்துவிடுவார்.
தொடக்கத்திலேயே இவர் அதிரடி காட்டினால், பாகிஸ்தான் கேப்டன் உடனடியாகத் தற்காப்பு நிலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். பீல்டர்களை எல்லைக்கோட்டிற்கு அனுப்புவது, விக்கெட் எடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டு ரன்களைக் கட்டுப்படுத்த நினைப்பது எனப் பாகிஸ்தான் அணி பின்வாங்கத் தொடங்கும்.
2025 ஆசியக் கோப்பையில் இதுதான் நடந்தது. 39 பந்துகளில் 74 ரன்கள் விளாசி பாகிஸ்தானை அபிஷேக் சர்மா மிரள வைத்தார். குறிப்பாகப் பாகிஸ்தானின் முன்னணி பந்துவீச்சாளரான ஷாகின் அப்ரிடியால் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் ஷாகின் அப்ரிடி அடிவாங்கிவிட்டால், அது பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் உடைத்துவிடும்.
பொதுவாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டால் இடதுகை பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள். ஆனால் அபிஷேக் சர்மா காகிதத்தில் உள்ள கணக்குகளை நம்புபவர் அல்ல. கிரீஸில் நன்றாகப் பின்னால் சென்று, பந்துவீச்சாளரின் நல்ல பந்துகளைக் கூட அடித்து நொறுக்குவார். பந்துவீச்சாளர் செட் ஆகும் வரை அவர் காத்திருக்க மாட்டார்.
அபிஷேக் சர்மாவைச் சமாளிக்கப் பாகிஸ்தான் உஸ்மான் தாரிக் என்ற சுழற்பந்து வீச்சாளரை நம்பியுள்ளது. பந்துவீசும்போது நிறுத்தி வீசுவது இவரது வழக்கம். இது பேட்ஸ்மேன்களைக் குழப்பும். ஆனால் அபிஷேக் சர்மா இதற்கும் தயார். கணிக்க முடியாத திசைகளில் ஷாட்களை ஆடி உஸ்மான் தாரிக்கையும் நிலைகுலைய வைப்பார் என எதிர்பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா சதம் அடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் 13 பந்துகளில் 30 ரன்கள் அடித்தால் கூட போதும். அது பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த திட்டத்தையும் அழித்துவிடும். அதன் பிறகு இந்தியா நினைத்தபடி ஆட்டத்தைக் கொண்டு செல்லும். அபிஷேக் சர்மா மட்டும் முதல் 6 ஓவர்களில் நிலைத்து நின்றுவிட்டால், பாகிஸ்தான் அணிக்கு அது மிகப்பெரிய பாதிப்பாக அமையும்.