துபாய்: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா வெளியேறி இருக்கிறார். தனது சிஷ்யனின் ஆட்டத்தை நேரில் பார்க்க யுவராஜ் சிங் துபாய் மைதானம் வந்திருந்த நிலையில், அபிஷேக் சர்மாவின் ஆட்டம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 113 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடி வந்தது. ஆனால் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேலின் அபார பவுலிங் காரணமாக அடுத்த 33 ரன்களில் 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால் 19.1 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 147 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணியின் அபிஷேக் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் சவால் அளிக்க வேண்டுமென்றால், அபிஷேக் சர்மாவை விரைவாக வீழ்த்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அதற்கேற்ப முதல் ஓவரிலேயே சரியான லெந்தில் ஷாகீன் அப்ரிடி பவுலிங் செய்தார். முதல் பந்திலேயே ஆஃப் ஸ்டம்ப் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பியது. ஆனாலும் முதல் ஓவரில் தப்பித்த அபிஷேக் சர்மா, 2வது ஓவரின் முதல் பந்திலேயே மாட்டிக் கொண்டார்.
ஃபஹீம் அஷ்ரப் வீசிய ஸ்லோயர் பந்தை கணிக்க தவறிய அபிஷேக் சர்மா, அதனை அதிக வேகத்தில் வருவதாக பேட்டால் டச் செய்ய, அது நேராக மிட் ஆஃப் திசையில் நின்றிருந்த ஹாரிஸ் ராஃப் கைகளில் சென்று விழுந்தது. இதனால் அபிஷேக் சர்மா வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆசியக் கோப்பை தொடரில் ஹாட்ரிக் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா அபாரமான ஃபார்மில் இருந்தார்.
6 இன்னிங்ஸில் 3 அரைசதங்கள் உட்பட 309 ரன்களை அபிஷேக் சர்மா குவித்திருந்தார். இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியல்க் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெஷலான இன்னிங்ஸை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப துபாய் மைதானத்திற்கு தனது சிஷ்யனின் ஆட்டத்தை பார்க்க யுவராஜ் சிங்கும் வந்திருந்தார். ஆனால் அவர் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார்.