மும்பை: டி20 உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களை வம்பிழுக்கும் பணியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக இந்திய அணியின் நட்சத்திர வீரரும் டி20 தர வரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனுமான அபிஷேக் ஷர்மாவை முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் கடுமையாக விமர்சித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அபிஷேக் ஷர்மாவை கோபப்படுத்தி அவரை விரைவில் ஆட்டம் இழக்க வைத்தால் அது பாகிஸ்தானுக்கு கூடுதல் சாதகம் என்பதால் அந்தப் பணியில் தற்போது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் ஊடகத்தில் பேசிய முகமது அமீர், அபிஷேக் ஷர்மாவை ஒரு உண்மையான பேட்ஸ்மேன் என்று நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர்," அவர் பேட்டை கண்டபடி சுழற்றுவார். அதுதான் அவருக்குத் தெரியும். அப்படி தான், நான் அவரை பார்க்கின்றேன். ஒரு வீரர் பந்தை சரியான லைன் மற்றும் லென்த்தில் விளையாட தெரியாமல், அந்த பந்தை சரியான முறையில் தற்காத்து விளையாடத் தெரியாத வீரரை நாம் எப்படி உண்மையான பேட்ஸ்மேன் என்று அழைக்க முடியும்."
"அவர் களத்திற்கு வரும்போது எல்லாம் பேட்டைகண்டபடி சுற்றுகிறார். இதில் சில பந்துகள் சரியான முறையில் சிக்கி சிக்ஸருக்கு செல்கிறது அதுவும் அவர் சின்ன மைதானங்களில் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுதளங்களில் விளையாடுகிறார். உண்மையிலேயே அபிஷேக் ஷர்மாவின் திறமை இன்னும் சரியான முறையில் சோதிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை."
"அவர் எப்போது பந்தை தற்காத்துக் கொள்ள கற்றுக் கொண்டு சரியான லைனில் வரும் பந்தை கையாள தெரிந்து கொள்கிறாரோ, அப்போது வேண்டுமானாலும் நான் அவரை உண்மையான பேட்ஸ்மேன் என்று ஒப்புக்கொள்கின்றேன். அபிஷேக் ஷர்மாவை தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் விளையாட வையுங்கள். பந்து அங்கு எப்படி ஸ்விங் ஆகும் என்று தெரியும். அப்போது அபிஷேக் ஷர்மாவின் உண்மையான திறமை வெளியே வரும்."
"அங்கு அவர் வெற்றி கண்டால் அவர் நல்ல பேட்ஸ்மேன் என்பதை முதலில் நான் சொல்லி பாராட்டுகிறேன் என்று முஹம்மது அமீர் தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முகமது அமீரின் கருத்தை மறுத்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் அகமது ஷேஷாத், அபிஷேக் ஷர்மாவை வெகுவாக பாராட்டினார். அமீர் ஒரு பவுலர் என்பதால் அவர் பந்துவீச்சாளரின் கண்ணோட்டத்தில் இருந்து பேசுவதாகவும் அவர் பதிலடி தந்துள்ளார்.