துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனை அடுத்து இந்திய அணி அபாரமாக விளையாடி 18.5 ஓவரில் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
குறிப்பாக தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார். இதில் ஆறு பவுண்டரிகளும்,5 சிக்சர்களும் அடங்கும். அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி எளிதில் வெற்றியை பெற்றது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இன்று நான் அதிரடியாக ஆடியதற்கு ஒரு சிம்பிளான காரணம் தான். பாகிஸ்தான் வீரர்கள் காரணமே இல்லாமல் எங்களை பார்த்து கோபமாக திட்டினார்கள். எங்களிடம் சண்டை போட்டார்கள். அது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதற்கான பதிலை என்னுடைய பேட் மூலம் நான் கொடுத்தேன்.
பாகிஸ்தான் வீரர்களுக்கு இதுபோல் ஒரு மருந்தை மட்டுமே என்னால் கொடுக்க முடியும். நானும் கில்லும் குழந்தை பருவத்தில் இருந்து ஒன்றாக விளையாடி வருகின்றோம். நான் அவருடன் இதுபோல் ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கின்றேன். எங்களுடைய பார்ட்னர்ஷிப் இன்று அணிக்கு மிகவும் முக்கியமாக மாறி இருக்கின்றது.
நான் அணிக்காக வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் ஒவ்வொருவரின் பேட்டிங்கையும் மகிழ்ச்சியுடன் பார்ப்போம். நான் அதிரடியாக ஆடுவதற்கு காரணம் என்னுடைய அணியின் ஆதரவு இருப்பதால் மட்டும்தான். என்னை இப்படி ஆக்ரோஷமாக ஆட சொல்லி எனக்கு உறுதுணையாக நிற்கின்றார்கள்.
நான் பயிற்சியிலும், இதே போல் தான் அதிரடியாக விளையாடி முயற்சி செய்வேன். இன்று என்னுடைய நாள் என்பதால் என்னுடைய அணிக்காக நான் வெற்றியை தேடி தருவேன் என்று நம்பினேன் என அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார்.