துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரை வென்ற கையோடு பாகிஸ்தான் வீரர்களின் வாய் சவடால்களுக்கும், வெற்று சீண்டல்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் ஆறு வார்த்தை பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அபிஷேக் ஷர்மா. அதன் மூலம் வெறுமனே வாயில் பேசக்கூடாது, செய்து காட்ட வேண்டும் என பாகிஸ்தான் அணிக்கு குட்டு வைத்துள்ளார்.
இந்த தொடர் முழுவதுமே களத்தில் இந்திய அணி தனது அபாரமான ஆட்டத்தால் வெற்றிகளை குவித்தது. தான் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வென்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியை மூன்று முறை வீழ்த்தியது. ஆனால், பாகிஸ்தான் அணியோ, தங்களது சர்ச்சைக்குரிய செயல்களால் மட்டுமே கவனம் பெற்றது. கைகுலுக்க மறுத்ததற்காகப் புகார் அளித்தது, போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக மிரட்டியது, ஒரு போட்டியை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தியது எனப் பல நாடகங்களை அரங்கேற்றியது.

குறிப்பாக பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப், அபிஷேக் ஷர்மாவுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். மேலும், விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கையில் சைகை செய்தார். இந்த நிலையில், இந்தத் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா, பாகிஸ்தானின் இந்த நாடகத்தனங்களைக் கிண்டலடிக்கும் விதமாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு வார்த்தைகளில் ஒரு பதிலடியைக் கொடுத்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வெற்றிகள்தான் எப்போதும் சத்தமாகப் பேசும்" (Wins make the loudest noise, always.) என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு, பாகிஸ்தானின் களத்திற்கு வெளியேயான செயல்களுக்கு, இந்தியாவின் கள வெற்றிகளே தகுந்த பதிலடி என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தப் பதிவு, இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
25 வயதான அபிஷேக் ஷர்மா, இந்தத் தொடர் முழுவதும் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர், இந்தத் தொடரில் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 314 ரன்களைக் குவித்து, தொடர் நாயகன் விருதை வென்றார்.
போட்டிக்குப் பிறகுப் பேசிய அபிஷேக் ஷர்மா, "முதல் பந்திலிருந்தே அதிரடியாக ஆட வேண்டும் என்பதுதான் எனது திட்டம். உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்த அணிக்குள் வருவது எந்த ஒரு தொடக்க ஆட்டக்காரருக்கும் எளிதல்ல. ஆனால், இதுபோன்று நீங்கள் விளையாட வேண்டுமென்றால், உங்களுக்குப் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடமிருந்து ஒரு சிறப்பு ஆதரவு தேவை. அந்த ஆதரவு இந்தத் தொடர் முழுவதும் எனக்குக் கிடைத்தது" என்று கூறினார்.