கொழும்பு: ஐசிசி டி20 உலககோப்பை 2026 தொடரில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு நகரில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் டி20 உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள அபிஷேக் ஷர்மா களமிறங்க உள்ளது உறுதியாகி உள்ளது. இதனை கேப்டன் சூர்யகுமாரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 25 வயதான அபிஷேக், டெல்லியில் நமீபியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் ஆடவில்லை. அதற்கு முன்பு அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் ரன் ஏதுவும் எடுக்கவில்லை. இதனால் சாதிட்கக வேண்டும் என்ற வெறியில் அபிஷேக் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல், அபிஷேக்கை வம்பிழுக்கும் விதமாக பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், அபிஷேக் எல்லாம் ஒரு பேட்ஸ்மேனே கிடையாது என்று கூறியுள்ளார்.

மேலும் ரன் குவிப்புக்கு சாதகமான சிறிய ஆடுகளங்களில் பேட்டை சுற்றுகிறார். இதில் பேட்டில் பந்து சிக்கி எதிர்பாராத விதமாக சிக்சர் செல்கிறது. நல்ல பவுலர்கள் மற்றும் பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் அவரால் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளார். இதனால், தனது பேட் மூலம் அமீரின் வாயை முட அபிஷேக் சர்மா தீவிரமாக தயாராகி வருகிறார்.
'பயிற்சியின் போது சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோரை எதிர்கொண்ட அபிஷேக், ஆர். பிரேமதாசா மைதானத்தின் அனைத்து மூலைகளிலும் பந்துகளைச் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். இது உஸ்மான் தாரிக் போன்ற பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பின்னர், அவர் வேகப்பந்து வீச்சாளர்களையும் திறம்பட சமாளித்தார்.
அபிஷேக்கின் நெட் பயிற்சியின் போது, கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக் பந்துவீச்சு பாணியைப் பின்பற்றி பந்துவீசினார். இந்த நிலையில் தான் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யகுமார், ”நீங்கள் அவர் ஆட வேண்டும் என்று விரும்பினால், நாங்கள் அவரை நாளை ஆட வைப்போம். கவலைப்பட பட வேண்டாம். போதுமா?” என்று தெரிவித்தார்.
அபிஷேக்கின் வருகை மூலம், சஞ்சு சாம்சன் அணியிலிருந்து விலக உள்ளார். இதனால் இஷான் கிஷனுடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்குவார். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவும் “அபிஷேக் ஒரு சிறந்த வீரர் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் நலமாகி ஆட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், சிறந்த அணிக்கு எதிராகவே நாங்கள் விளையாட விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார்.