துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி ஒன்பதாவது முறையாக வென்று சாதனை படைத்தது. கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது.
எனினும் பரிசு கோப்பை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிங் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வியிடம் இருந்து வாங்க மாட்டோம் என இந்தியா போர் கொடி தூக்கியது. ஆனால் பரிசு அளிக்கும் பொறுப்பை தாம் தான் வைத்துக் கொள்வேன் என்றும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாங்காதீர்கள் என்றும் மோசின் நக்வி கூறியிருந்தார்.

இதனால் கடுப்பான இந்தியா கோப்பையை வாங்காமலேயே தாயகம் சென்று விட்டது. இந்த நிலையில் இந்திய அணிக்கு கோப்பையை வழங்குமாறு பிசிசிஐ சார்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தான் இருக்கும் வரை கோப்பையை வழங்கும் உரிமையை வேறு யாருக்கும் தர மாட்டேன் எனக் கூறி மோசின் நக்வி சிறுபிள்ளை போல் அடம் பிடித்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக நடைபெற்ற பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மோசின் நக்வி, பிசிசிஐக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் வரும் நவம்பர் 10ஆம் தேதி துபாயில் இந்திய அணிக்கு ஆசிய கோப்பையை வழங்கும் நிகழ்ச்சியை வைத்திருப்பதாகவும், இதில் தவறாமல் இந்திய அணி வீரர்களும் கேப்டன் சூரியகுமார் யாதவும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கோப்பையை தாம் தான் வழங்குவேன் என்றும் மோசின் நக்வி அதில் மீண்டும் கூறியிருக்கிறார். இது தற்போது இந்தியாவை மேலும் எரிச்சல் அடைய செய்திருக்கிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டாலும், இந்தியா இதில் பங்கேற்காது எனக் கூறப்படுகிறது. இதனிடையே வரும் நவம்பர் மாதம் நான்காம் தேதியில் இருந்து ஏழாம் தேதி வரை ஐசிசி யின் ஆலோசனை கூட்டம் துபாயில் நடைபெறுகிறது.இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை தொடர்பாகவும் அண்மையில் பாகிஸ்தானின் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.