லண்டன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி என்றாலே மைதானத்தில் எப்போதும் ஒரு விதமான பதற்றம் நிலவும். ஆனால், சமீபகாலமாக இந்த மோதல் ஆட்டத்தைத் தாண்டி, மைதானத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்க மறுப்பது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தின் முடிவில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆகியோர் பாரம்பரியமாகச் செய்யப்படும் கை குலுக்கும் முறையைத் தவிர்த்தனர். இது தற்செயலாக நடந்தது அல்ல, இந்திய அணி தரப்பில் எடுக்கப்பட்ட ஒரு கொள்கை ரீதியான முடிவு என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போதே இந்த நடைமுறை தொடங்கியது. எல்லையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், இந்திய ராணுவத்திற்குத் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாகவும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கப் போவதில்லை என்ற முடிவை இந்திய வீரர்கள் எடுத்தனர். இந்திய அணியின் இந்த முடிவுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் சிலர் இது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்று விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான மைக்கேல் வாகன், அலஸ்டர் குக், பில் டப்னெல் மற்றும் டேவிட் லாயிட் ஆகியோர் ஒரு இணையதள நிகழ்ச்சியில் விவாதித்தனர். பில் டப்னெல் பேசுகையில், தற்போது இந்திய அணி இருக்கும் நிலைக்கு பாகிஸ்தான் அணி ஈடுகொடுக்க முடியாமல் திணறுவதாகவும், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி என்பது சமபலமில்லாத ஒன்றாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
மைக்கேல் வாகன் கூறுகையில், "மைதானத்தில் இந்திய அணியைப் பார்க்கும் போதெல்லாம் பாகிஸ்தான் வீரர்கள் மிரண்டு போயிருப்பதைப் போலத் தெரிகிறது. களத்தில் கைகுலுக்க மறுப்பது போன்ற சூழல்கள் உறவுமுறை கசந்துள்ளதைக் காட்டுகிறது" என்றார்.
இந்த விவாதத்தில் பங்கேற்ற இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்தார். அவர் பேசுகையில், "மைதானத்தில் கைகுலுக்க மறுக்கும் இவர்கள், உண்மையில் கேமராக்கள் இல்லாத இடங்களில் பேசிக் கொள்கிறார்களா? மூடிய கதவுகளுக்குப் பின்னால் வீரர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சகஜமாகப் பேசிக் கொள்வதாக நான் எங்கோ படித்தேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அப்படியானால் இந்த கைகுலுக்கல் விவகாரம் என்பது வெறும் வெளியே இப்படி காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்படுகிறதா? மைதானத்தில் மட்டும் கைகுலுக்காமல் இருந்துவிட்டு, வெளியே அனைவரும் நண்பர்களாக இருக்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்திய வீரர்களின் இந்த நிலைப்பாடு தேசப்பற்றைச் சார்ந்தது என்று ஒரு தரப்பும், கிரிக்கெட்டில் இதைக் கொண்டு வரக்கூடாது என்று மறுதரப்பும் வாதிட்டு வரும் நிலையில், அலஸ்டர் குக்கின் இந்தக் கருத்து மீண்டும் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.