கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் தங்கள் வீடுகளில் இருந்த தொலைக்காட்சிகளை அடித்து நொறுக்கித் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பிரபல யூடியூபர்கள் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தத் தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

போட்டிக்கு முன்னதாக இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்திருந்தது. தற்போது அடைந்த தோல்வியைப் பார்த்துப் பிரபல பாகிஸ்தான் யூடியூபரான ஆகா முஸ்தபா ஹாசன் தனது வீடியோவில் கடுமையாகப் பேசியுள்ளார். "பேசாமல் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணித்து இருந்தாலாவது நம் மானம் மிஞ்சியிருக்கும். இப்போது அசிங்கப்பட்டு நிற்கிறோம்" என்று அவர் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
தோல்வி உறுதியானதும் விரக்தியடைந்த ரசிகர் ஒருவர், தனது வீட்டில் இருந்த டிவியை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "இந்தியாவிடம் மீண்டும் தோற்றுவிட்டோம். அந்த விரக்தியில் நான் டிவியை உடைத்துவிட்டேன். மிகவும் அவமானமாக இருக்கிறது" என்று ரசிகர்கள் கண்ணீருடன் பதிவிட்டுள்ளனர்.
"சூர்யகுமார் யாதவ் சொன்னது சரிதான். இப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டியே இல்லை. இந்தியா வேறு ஒரு தரத்தில் விளையாடுகிறது" என லைபா அப்பாஸி என்ற பாகிஸ்தான் யூட்யூபர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான பாபர் அசாமை ரசிகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். "பாபர் அசாமை கிங் என்று அழைப்பதை முதலில் நிறுத்துங்கள். அவர் அணியில் இருக்கவே தகுதியற்றவர். 175 ரன்கள் எல்லாம் நமக்கு எட்டாக்கனி" என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்தத் தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் (NRR) அமெரிக்கா அணியை விடக் கீழே சென்றுள்ளது. இதனால் அந்த அணியின் சூப்பர் 8 சுற்று வாய்ப்பு தற்போது ஊசலாட்டத்தில் உள்ளது.