துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி செய்த ஒரு தவறு கிரிக்கெட் விமர்சகர்களின் பேச்சுக்கு ஆளாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு t20 உலக கோப்பை நடைபெறுவதால் அதற்கு பயிற்சிக்களமாக இருக்க வேண்டும் என்பதற்காக இம்முறை ஆசிய கோப்பை தொடர் t20 ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்திய அணி தாங்கள் விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் யுஏஇ அணிக்கு எதிராக ஒரே ஒரு ஸ்பெசலிஸ்ட் வேகப்பந்துவீச்சாளர் ஆன பும்ராவை மட்டுமே பயன்படுத்தியது. இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியாவையும், மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக ஆல்ரவுண்டர் சிவம் துபேவையும் பயன்படுத்தியது.

பயிற்சியாளர் கம்பீரின் இந்த முடிவுக்கு ஏற்கனவே கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்திய டி20 அணியின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங்கை அணியில் சேர்க்காதது தவறு என்றும் பெரிய அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த யுக்தி பயனளிக்காது என்றும் கூறியிருந்தனர்.
தற்போது கிரிக்கெட் வல்லுநர்களின் எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உண்மையாக மாறி இருக்கிறது. 19 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 111 ரன்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்து இருந்தது. கடைசி ஓவரில் முதல் பந்திலே விக்கெட் விழுந்து இருக்கலாம். இல்லையென்றால் ஒரு முழு நேர வேகப்பந்துவீச்சாளர் வீசியிருந்தால், குறைந்தபட்சம் ஆறு ரன்கள் இல்லை ஏழு ரன்கள் கொடுத்து இருப்பார்.
ஆனால் ஹர்திக் பாண்டியா அந்த ஓவர் வீச ஷாகின் அப்ரிடி இரண்டு சிக்ஸர்கள் இரண்டு முறை டபுள் என மொத்தமாக 16 ரன்கள் அடித்திருந்தார். இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் 111 ரன்கள் இருந்த பாகிஸ்தான அணி தற்போது 127 ரன்கள் என்ற நிலைக்கு சென்றது.இந்த இலக்கு குறைந்த இலக்கு என்பதால் இந்தியாவுக்கு பெரிய கவலை இல்லை.
ஆனால் கடைசி ஓவரில் அடிக்கப்படும் ஒவ்வொரு ரன்களும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும். இதே இடத்தில் பாகிஸ்தானுக்கு பதிலாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவும் இருந்திருந்தால் நிலைமை இன்னும் வேறு மாதிரி ஆகியிருக்கும். இதனால் ஆர்ஸ்தீப் சிங் போன்றோர் யாக்கர்களை தொடர்ந்து வீசக்கூடிய முழு நேர வேகப்பந்து வீச்சாளரை இந்திய அணி பயன்படுத்த வேண்டும் என்றும், இந்த முடிவை கைவிட வேண்டும் என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.