துபாய்: ஆசிய கோப்பை லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்திய, இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றிருக்கிறது. துபாயில் நடைபெற்ற லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்தியா எதிர்கொண்டது.போர் பதற்றத்திற்கு பின் இரு அணிகளும் முதல் முறை மோதிக்கொண்டதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறிய்து.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர் ஆட்டத்தின் முதல் அதிகாரப்பூர்வ பந்தில் ஆட்டம் இழந்தார்.

அதேபோன்று முகமது ஹாரிஸ் மூன்று ரன்களில், பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழக்க கேப்டன் சல்மான் ஆகா மூன்று ரன்களிலும், ஹசன் நவாஸ் ஐந்து ரன்களிலும், முகமது நவாஸ் டக் அவுட் ஆகியும் வெளியேறினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 64 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. எனினும் மற்றொரு தொடக்க வீரரான ஃபர்கான் மட்டும் பொறுப்பாக விளையாடிய 44 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். 19 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 111 ரன்கள் எடுத்து ஒன்பது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் இறுதியில் சாகின் அப்ரிடி கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசி 16 ரன்களை அடித்தார். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது இந்திய பந்துவீச்சு தரப்பில் குல்தீப் மூன்று விக்கெட்டுகளையும்,பும்ரா, அக்ஷர் பட்டேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதனை அடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ஷாகின் அப்ரிடி தன்னுடைய இன் ஸ்விங் யாக்கர்கள் மூலம் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்த்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அபிஷேக் ஷர்மா தனது பேட்டிங் மூலம் ஆப்பு வைத்தார். எதிர்கொண்ட முதல் பந்திலே இறங்கி வந்து பவுண்டரி அடித்த அபிஷேக் ஷர்மா பட்டையை கிளப்பினார்.
இதனால் சாகின் ஆப்ரிடியின் முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மறுமுனையில் கில் இரண்டு பவுண்டர்களை அடித்து செட்டாக முற்பட்டபோது சையிம் அயூப் பந்துவீச்சில் ஸ்டெம்பிட் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டிய அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதன் மூலம் இந்திய அணி 5 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் 50 ரன்கள் எட்ட பவர் பிளே முடிவில் 61 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதுபோன்று நடு வரிசையில் சூரிய குமார் மற்றும் திலக் வர்மா ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். திலக் வர்மா 31 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் சூரியகுமார் யாதவும் அபாரமாக விளையாடி 37 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி வெற்றி இலக்கை 15.5 ஓவரில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.இதன் மூலம் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முதல் அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது.