துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றதன் மூலம், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடைசியாக இந்திய அணி பாகிஸ்தானை 2007 டி20 உலகக் கோப்பையில் தான் இறுதிப் போட்டியில் வீழ்த்தி இருந்தது.
அதற்குப் பிறகு 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் மோதியபோது, அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 18 ஆண்டுகளாக ஒரு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்த முடியாத நிலையில் இருந்த இந்திய அணி, இந்த ஆசிய கோப்பையில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அதில் வெற்றியும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்த வெற்றி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐந்தாவது முறையாக ஒரு இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி ஆகும். இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 13 இறுதிப் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் பாகிஸ்தான் 8 வெற்றிகளையும், இந்தியா 5 வெற்றிகளையும் பெற்று இருக்கிறது. மேலும், ஆசிய கோப்பை தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டியில் மோதிய இந்திய அணி அதில் வெற்றியும் பெற்று புதிய சரித்திரம் படைத்து இருக்கிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் துவக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் 57 ரன்களும், ஃபகார் ஜமான் 46 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் சிறப்பாகப் பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, முதலில் மிகவும் நிதானமாக ஆடியது. எனினும், கடைசி சில ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை ஆடி, 19.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. திலக் வர்மா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் 53 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்தார். சிவம் துபே அழுத்தத்திற்கு இடையே 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம், இந்திய அணி ஆசியக் கோப்பையைத் தனதாக்கிக் கொண்டது.