துபாய்:ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தற்போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதால், இந்தியாவுக்கு பெரிய இலக்கை நாங்கள் நிர்ணயிப்போம் என பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முதலில் பந்து வீசிய ஹர்திக் பாண்டியா ஆட்டத்தின் முதல் அதிகாரப்பூர்வ பந்தில் பாகிஸ்தான் அணியின் அதிரடி தொடக்க வீரர் சயூப் அயூப்பை வீழ்த்தினார்.

இது போன்று அடுத்த ஓவரில் பும்ராவின் அபார பந்துவீச்சால் முகமது ஹாரிஸ் மூன்று ரன்களில் வெளியேறினார். இதேபோன்று கேப்டன் சல்மான் ஆகா மூன்று ரன்களிலும், ஹசன் நவாஸ் ஐந்து ரன்களிலும், ஆல்ரவுண்டர் முகமது நவாஸ் டக்அவுட் ஆகியும் அடுத்தடுத்து வெளியேறினர்.
ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் தொடக்க வீரர் ஃபர்கான் மட்டும் நிதானமாக விளையாடி 44 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் தங்களுடைய அபாரமான பந்துவீச்சு மூலம் தொடர்ந்து விக்கெட் வேட்டைகளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் மூன்று பேரும் அபாரமாக செயல்பட்டார்கள். வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டும், குல்திப் யாதவ் நான்கு ஓவர்கள் வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்களும், அக்சர் பட்டேல் நான்கு ஓவர்கள் வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
குறிப்பாக இந்திய அணி 12 ஓவர் சுழற்பந்துவீச்சில் ஆறு விக்கெட்டை வீழ்த்தியது. மொத்தமாக 60 ரன்கள் கொடுத்திருந்தது. இறுதியில் சாகின் அப்ரிடி மட்டும் 4சிக்ஸர் அடித்து 16 பந்தில் 33 ரன்கள் எடுத்து அசத்தினார்.இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது.