துபாய்: ஆசிய கோப்பை தொடரில் ஆறாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரம்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஓமன் அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது.
இதனால் பாகிஸ்தான் அணி உத்வேகத்துடன் இருப்பதாக கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு பதில் அளித்த ஸ்ரீகாந்த், பாகிஸ்தான் அணியை கிண்டல் அடித்திருக்கிறார். "ஓமன் அணியில் இருந்த வீரர்களை பார்த்தீர்கள் என்றால் அனைவருமே அங்கிள் ஆக தான் இருந்தார்கள்."

"அந்த அங்கிள் அணிக்கு எதிராக கூட பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாறியது. பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் சாஹித் ஆப்ரிடி கூட அபாயகரமான வீரராக திகழவில்லை. ஓமன் அணியை பாகிஸ்கான் வீழ்த்திருக்கலாம். ஆனால் அந்த அணியில் உள்ள வீரர்கள் அனைவருமே 35 வயதுக்கு மேற்பட்ட அங்கில்கள்தான் இருக்கின்றார்கள்."
"எனவே அவர்களுக்கு எதிராக வெற்றி பெற்றதில் எந்த ஒரு மகிழ்ச்சியும் அடைய தேவையில்லை. ஏன் எனது வயதில் கூட நான் ஓமன் அணியை கேப்டனாக வழி நடத்துவேன். ஓமன் அணியின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு உள்ள ரியல் பரிட்சையே இந்தியாவுக்கு எதிராக தான் இருக்கின்றது. இந்தியாவின் இளம் வீர்களை எதிர்கொள்ள பாகிஸ்தான் பேட்ஸ்மேன் சிரமப்படுவார்கள் என கருதுகின்றேன்."
"பாகிஸ்தான் போன்ற ஒரு அணியை எதிர்கொள்ள நான்கு பேட்ஸ்மேன்கள் போதும். அப்படி இருக்கும் போது எதற்கு இத்தனை பேட்ஸ்மேன்களை களமிறங்கி இருக்கிறது. அதற்கு பதிலாக கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை சேர்த்துக் கொள்ளுங்கள். பாகிஸ்தான் அணியின் பேட்டர் முஹம்மது ஹாரிஸ், ஓமனுக்கு எதிராக நன்றாக விளையாடி இருந்திருக்கலாம்.ஆனால் அவருடைய ஷார்ட் விதத்தை பார்த்தால் அனைத்தும் மிட்விக்கெட் மற்றும் ஸ்கொயர் லெக் திசையை நோக்கி இருக்கின்றது."
"எனவே அவருக்கு எதிராக வருண் சக்கரவர்த்தி பந்து வீசினால் நிச்சயம் விக்கெட்டை வீழ்த்த முடியும். இதுபோன்று பக்கர் சமானுக்கு எதிராக குல்திப் யாதவை பயன்படுத்தினால் அவருடைய விக்கெட்டையும் வீழ்த்த முடியும். பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை இந்தியாவுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் பேட்டிங் வரிசை பல மடங்கு பலமானதாக இருக்கின்றது.கில் போன்ற வீரர்கள் எல்லாம் வேறு ஒரு லெவலில் இருக்கின்றார்கள். எனவே பேட்டிங்கை பொறுத்த வரை பாகிஸ்தான் உடன் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவுக்கு இருக்கின்றது" என ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.