துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் போட்டி முடிவடைந்த உடன் இரு அணி வீரர்களும் களத்தில் ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல் நேராக ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி சென்றுவிட்டனர்.
இந்த தருணத்தில் போட்டி முடிவடைந்த உடன் பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர். பாகிஸ்தான் வீரர்கள் யாரும் வரவில்லை. எப்போதும் தோல்வி அடைந்த கேப்டனிடம் இந்த போட்டி எவ்வாறு சென்றது? என்ன தவறு நடந்தது? அடுத்த போட்டியில் எப்படி இதை திருத்திக் கொள்வீர்கள் போன்ற கேள்விகள் எல்லாம் கேட்கப்படும்.

அதற்கு தோல்வி அடைந்த கேப்டன் சல்மான் அகா பதில் அளிப்பார். ஆனால் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வியை தழுவியதால் மனம் உடைந்த கேப்டன் சல்மான் ஆகா, பரிசளிக்கும் நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்தார். இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக இப்படி ஒரு சம்பவம் கிரிக்கெட்டில் எப்போதாவது தான் நடைபெறும். ஒரு முறை சென்னை டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அப்போது கடைசி வரை போராடிய சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழந்தவுடன் இந்தியா தோற்றது. அப்போது பரிசளிக்கும் விழாவில் டெண்டுல்கர் பங்கேற்காமல் தோல்வியில் விரக்தியில் புறக்கணித்தார்.
தற்போது அதேபோல் சல்மான் ஆகாவும் தற்போது பரிசளிக்கும் நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்திய அணி கேப்டன் சூரியகுமார், இந்திய ராணுவத்திற்கும் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக சில வார்த்தைகளை பேசினார்.
இந்திய வீரர்கள் இப்படி பேசுவார்கள் என்பதை புரிந்து கொண்டு தான் பாகிஸ்தான் கேப்டன் மற்றும் வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பரிசளிக்கும் நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்திருக்கிறார்கள். எனினும், இது குறித்து கிண்டல் அடிக்கும் ரசிகர்கள், அடி அவ்வளவு பலமா? அதனால் தான் டிரெஸ்ஸிங் ரூம் விட்டு வெளியே வரவில்லையா என்று கிண்டல் அடித்த வருகின்றனர். பாகிஸ்தான் அணி கேப்டன் இந்த செய்த செயல் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.