துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் மிகவும் முக்கியமான ஆட்டமாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி கருதப்படுகிறது. இந்த ஆட்டத்திற்கு முன்பாகவே மைண்ட் கேம்ஸ் ஆடும் வித்தையை பாகிஸ்தான் ஈடுபட தொடங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், முகமது நவாஸை தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என புகழ்ந்தார். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இருந்து நீக்கப்பட்ட நவாஸ், 11 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி, தற்போது அசத்தி வருகிறார்.

சமீபத்தில் ஷார்ஜாவில் நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். இது குறித்து பேசிய மைக் ஹெசன், "எங்கள் அணியின் நல்ல விசயம் என்னவென்றால், எங்களிடம் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். முகமது நவாஸ், தற்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர், கடந்த ஆறு மாதங்களாக அவர் மீண்டும் அணிக்கு வந்த பிறகு இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளார்."
"மேலும், எங்களிடம் அப்ரார் மற்றும் சுபியான் உள்ளனர். சயிம் அயூப் இப்போது உலகின் முதல் 10 ஆல்-ரவுண்டர்களில் ஒருவர். சல்மான் அலி ஆகா இன்னும் அதிகம் பந்து வீசவில்லை. ஆனால் அவர் பாகிஸ்தானின் டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ளார். எனவே, நிலைமைகள் பொருத்தமாக இருந்தால், எங்களிடம் பல சுழற்பந்து வீச்சு ஆப்சன்கள் உள்ளன." என்று ஹெசன் கூறினார்.
பாகிஸ்தானுக்கு வலுவான சுழற்பந்து வீச்சு அணி இருந்தாலும், இந்தியாவிடம் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், மற்றும் அக்ஷர் படேல் ஆகியோரைக் கொண்ட தலைசிறந்த சுழற்பந்துவீச்சு படை உள்ளது. ஆனால், வெறும் வார்த்தை விளையாட்டுக்காக இப்படி ஒரு கருத்தை பாகிஸ்தான் பயிற்சியாளர் வெளியிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் மோதும் நிலையில் தனது அனுபவத்தை கூறியுள்ள அவர், "பிற அணிகளுடன் அல்லது வர்ணனை செய்யும் போது நான் பல போட்டிகளை தொலைவில் இருந்து பார்த்திருக்கிறேன். இவ்வளவு உணர்ச்சிகரமான நிகழ்வில் நேரடியாக இருப்பது உற்சாகமாக இருக்கும்."
"இந்தியா தங்களது ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது, அது நியாயமானது. நாங்கள் ஒரு அணியாக நாளுக்கு நாள் முன்னேறுவதில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் அதிகம் முன்னோக்கி சிந்திப்பதில்லை. முன்னுள்ள சவாலை நாங்கள் நன்கு அறிவோம். நான் நிச்சயமாக இதை எதிர்நோக்குகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.