துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது இரு துருவங்களாக உள்ள இந்திய பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் அணிகள் கடந்த மே மாதம் ஏற்பட்ட போர் பதற்றத்திற்கு பிறகு முதல் முறையாக விளையாடுகிறது. பகல்காமில் நடைபெற்ற கோர சம்பவத்திற்கு பிறகு இரு நாட்டுக்கும் இடையே விரிசல் அதிகரித்திருக்கிறது.
இந்த சூழலில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சூழலில் இந்தியா,பாகிஸ்தான் ஆட்டம் நிச்சயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரியாங் பாஞ்சால் தெரிவித்திருக்கிறார்.

குஜராத்தை சேர்ந்த 35 வயதான பிரியாங் பாஞ்சல், இந்திய ஏ அணிக்காக பல்வேறு ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.இது குறித்து பேசிய அவர், போட்டி வேண்டுமா வேண்டாமா என வெளியில் தான் குரல்கள் எழுகின்றன. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக அணி நிர்வாகம் என்ன சொல்கிறதோ அதை தான் நாங்கள் பின்பற்ற முடியும்.
எனக்கு தெரிந்தவரை இந்திய அணியில் தற்போது உள்ள அனைத்து வீரர்களும் போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தான் கவனம் செலுத்தி கொண்டு வருவார்கள். ஏனென்றால் அது மட்டும் தான் வீரர்கள் கையில் இருக்கின்றது. எனவே வெளியில் என்ன நடக்கிறது என்பது குறித்து எல்லாம் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். ஏனென்றால் இங்கு கிரிக்கெட் விளையாட தான் வீரர்கள் வந்திருக்கிறார்கள்.
ஆசிய கோப்பையை இம்முறை இந்திய அணி தான் வெல்லும். அதற்கான வாய்ப்புகளை அதிகம். பாகிஸ்தான் அணியில் பேலன்ஸ் சரியாக இல்லை. அந்த அணியில் தற்போது அதிக அளவு புதுமுக வீரர்கள் இருக்கிறார்கள்.எனவே இந்த போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு கடும் சவால்களை அளிக்கக்கூடிய அணியாக இருந்திருக்கிறார்கள். ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகள் கடும் சவால்களை தந்தது. ஆனால் தற்போது இந்திய கிரிக்கெட் பல மடங்கு வளர்ச்சியை பெற்று இருப்பதால், யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை.
நமது அணியில் வீரர்கள் எதிர் அணியை ஆதிக்கம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் பிசிசிஐ பல இளம் வீரர்களை உருவாக்கி இருக்கின்றது. கடும் நெருக்கடிகளை உருவாக்கக்கூடிய உள்நாட்டு கிரிக்கெட் தொடர் அதிக அளவு பிசிசிஐ நடத்துகிறது. இதில் விளையாடி பல வீரர்கள் நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள்.
இதனால் தான் இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. என்னை பொறுத்தவரை தற்போது பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் ஐந்தாம் இடத்தில் தான் விளையாட வேண்டும். முதல் ஐந்து இடங்களில் அவருக்கு தற்போது அந்த இடம் தான் பொருந்தும். எவ்வளவு நல்ல பவுலராக இருந்தாலும் சஞ்சு சாம்சன் அதனை எளிதாக எதிர்கொண்டு ரன்கள் சேர்ப்பார். மேலும் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர் நன்றாக விளையாடுவார் என்பதால் அவரை நடுவரிசையில் களம் இறக்கி பார்க்க வேண்டும். எனினும் இது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்.