துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இன்று முக்கிய லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சர்வதேச டி 20 கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 13 முறை மோதியுள்ளன. இதில் இந்திய அணியே 10 முறை வென்று ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றது.
மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் டாஸ் வென்றால் இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?

ஆடுகளம் எவ்வாறு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பந்து வீசுவது என்பது கடினமாக மாறிவிடுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீசுவதே சாலச் சிறந்தது.
இந்திய அணி தற்போது வருண் சக்கரவர்த்தி, குல்திப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்குகிறது. இதனால் இரவு நேரத்தில் இரண்டாவது பந்து வீசும் போது சுழற் பந்துவீச்சாளர்களால் பந்தை பிடித்து சரியாக செயல்பட முடியாது. இதன் காரணத்தால் முதலில் பந்து வீச வேண்டும்.
மேலும் ஆடுகளமும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக தான் செயல்படும். மேலும் ஆடுகளும் பொதுவாக தோய்வாக மாறுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பனிப்பொழிவு இருக்கும் பட்சத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்வதற்கு சிறப்பான சூழல் நிலவும். கடந்த முறை இதே மைதானத்தில் தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டு வீழ்த்தியது.
ஆனால் இந்த ஆட்டத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதுபோன்று கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட ஆர்ஸ்தீப் சிங் அணிக்குள் வருவாரா? அப்படி அவர் வந்தால் எந்த வீரர் இடம் கொடுப்பார் என்ற கேள்வி எல்லாம் எழுந்துள்ளது.