துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட போர் பதற்றத்திற்கு பிறகு கிரிக்கெட் களத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் முதல் முறையாக மோதுகிறது.இதனால் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் 13 முறை மோதியுள்ள நிலையில், 10 முறை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. மூன்று முறை மட்டுமே பாகிஸ்தான் அணி வென்றுள்ளது. இந்த நிலையில் துபாயில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.

பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அகாவின் இந்த முடிவு கிரிக்கெட் வல்லுனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏனென்றால் பனிப்பொழிவு துபாயில் இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். இந்த சூழலில் முதலில் பந்து வீசுவதே சிறந்த முடிவாக அமையும். ஆனால் சல்மான் அகா இந்தியாவுக்கு சாதகமான ஒரு முடிவை எடுத்து விட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அகா, நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கின்றோம். நாங்கள் தொடர்ந்து நல்ல கிரிக்கெட் விளையாடி வருகிறோம். இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றோம். ஆடுகளம் தோய்வாக இருக்கும். இதன் காரணமாகத்தான் நாங்கள் முதலில் பேட்டிங் செய்கின்றோம்.
பெரிய இலக்கை நிர்ணயித்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும். நாங்கள் முதல் போட்டியில் விளையாடிய அதே அணியை வைத்துதான் விளையாடுகின்றோம். நாங்கள் இங்கு 20 நாட்களுக்கு மேல் தங்கி இருக்கின்றோம். எனவே ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், நாங்கள் முதலில் இந்த ஆட்டத்தில் பந்து வீச தான் இருந்தோம். எனவே டாசின் முடிவு எனக்கு மகிழ்ச்சியை தான் தருகின்றது. நாங்கள் ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொரு போட்டியை எடுத்துதான் விளையாடுகின்றோம். இந்த ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கின்றது.
இரவு நேரத்தில் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என நினைக்கின்றேன். காலையில் வெப்பம் அதிகமாக இருந்தது. எனவே இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும். நாங்களும் எங்கள் அணியில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று அவர் கூறினார்.