துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் குரூப் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பின் இந்திய அணி வீரர்கள் கை குலுக்க மறுத்தது பெரிய பிரச்சனையாக மாறி இருக்கும் நிலையில் இரு அணிகளும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் சந்திக்க உள்ளன. அந்தப் போட்டிக்கு முன்தினம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் சூப்பர் 4 சுற்றில் கை குலுக்குவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சூசகமாக "கதவை சாத்திக் கொள்வோம்" என நெத்தியடி பதிலை கூறி உள்ளார்.
குரூப் சுற்றில் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கலைத் தவிர்த்தது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடரிலிருந்து விலகுவோம் என மிரட்டல் விடுக்கும் வரை சென்றது. இந்த சூழலில், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறு பேசியது, இந்த விவகாரத்தை மேலும் சூடேற்றியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஒரு நிருபர் மிகவும் சூசகமாக ஒரு கேள்வியை முன்வைத்தார். "கடந்த பாகிஸ்தான் போட்டி போல, பேட்டிங்கைத் தவிர மற்ற அம்சங்களிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டது. அடுத்த போட்டியிலும், முந்தைய ஆட்டத்தில் செய்ததையே இந்தியா மீண்டும் செய்யும் என எதிர்பார்க்கலாமா?" என்று அவர் கேட்டார். இது அப்பட்டமாக 'கை குலுக்க மாட்டோம்' என்ற கொள்கையைத்தான் குறிப்பிடுகிறது என்பதை அங்கிருந்த அனைவரும் புரிந்துகொண்டனர். இந்த வலையில் சற்றும் விழாமல், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மறைமுகமாகவே பதில் சொல்லி அசத்தினார்.
நிருபரின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட சூர்யகுமார், புன்னகையுடன், "ஓ, பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்படுவதைப் பற்றி கேட்கிறீர்களா? ஆம், நிச்சயமாக. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஒரு நல்ல செயல்திறன் வெளிப்படும். அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பியிருக்கும்போது, இவ்வளவு பெரிய கூட்டத்திடமிருந்து ஆதரவு கிடைப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் நாட்டுக்காக எங்களின் சிறந்த பங்களிப்பைக் கொடுக்கவும், ஆட்டத்தில் எங்களால் முடிந்த சிறந்ததைச் செய்யவும் விரும்புகிறோம்" என்று பதிலளித்தார்.
மேலும், இந்திய அணி வீரர்களுக்கு தான் சொல்லும் ஆலோசனை என்ன என்றும் கூறினார். "உங்கள் அறைக்கதவை மூடுங்கள், செல்போனை அணைத்துவிட்டுத் தூங்குங்கள். இதுதான் சிறந்த வழி. சொல்வது எளிது, ஆனால் செய்வது கடினம். ஏனென்றால் நீங்கள் நண்பர்களைச் சந்திப்பீர்கள், இரவு உணவிற்காக வெளியே செல்வீர்கள், மேலும் இதுபோன்ற விஷயங்களைப் பார்க்க விரும்பும் வீரர்களும் இருக்கிறார்கள். எனவே இது சவாலானது" என்று கூறினார்.
"எதைக் கேட்க வேண்டும், எதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது உங்கள் கையில்தான் உள்ளது. நான் அனைத்து வீரர்களிடமும் தெளிவாகக் கூறியுள்ளேன். இந்தத் தொடரில் நாம் சிறப்பாகச் செயல்பட விரும்பினால், வெளியிலிருந்து வரும் நிறைய இரைச்சல்களை நாம் புறக்கணித்து, உங்களுக்கு எது நல்லதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இரைச்சலை முழுவதுமாக நிறுத்தச் சொல்லவில்லை, ஆனால் உங்களுக்கு எது நல்லதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். யாராவது உங்களுக்கு ஆட்டத்தில் உதவக்கூடிய நல்ல ஆலோசனையையும் வழங்கலாம்" என்று ஒரு கேப்டனுக்குரிய முதிர்ச்சியுடன் பேசினார்.