மும்பை: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் வெறும் எட்டு ஓவர் பாகிஸ்தான் கதையை முடித்துவிடும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.இரு அணிகளுக்கும் இடையிலான லீக் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியின் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

இருவரும் அதிக அளவு விக்கெட்டுகளை எடுக்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு காலம் காலமாக லெக் ஸ்பின்னரை எதிர் கொள்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கிறது. லெக் ஸ்பியன் மட்டும் அல்ல எந்த சுழற் பந்துவீச்சாக இருந்தாலும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள். எனவே இந்தியா வீசப்போகும் அந்த எட்டு ஓவர்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் என நினைக்கின்றேன்.
எனவே குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் இன்றைய ஆட்டத்தில் முக்கிய வீரர்களாக விளங்குவார்கள். ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஹாரிஸ் அரை சதம் அடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் பக்கர் சமானும் நடு வரிசையில் இருக்கின்றனர். இந்த இருவரின் விக்கெட்டையும் எடுத்து விட்டால் போட்டி முழுக்க இந்தியாவுக்கு சாதகமாக மாறிவிடும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
வருண் சக்கரவர்த்தி இதுவரை 19 t20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளையும், குல்தீப் 41 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். கடந்த யுஏஇ அணிக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப் 2.1 ஓவரில் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். வருண் சக்கரவர்த்தி இரண்டு ஓவர்கள் வீசி நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.