துபாய்: 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட அதே அணியுடன் இந்தியா களமிறங்கியுள்ளது. இதில் முக்கியமாக, சமீபத்தில் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
ஓமனுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அர்ஷ்தீப் சிங், டி20 அரங்கில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்திய வேகத்திலேயே, பாகிஸ்தானுக்கு எதிரான இந்த முக்கியமான சூப்பர் 4 போட்டியில் அவர் இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓமனுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் சற்று ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்திருந்தாலும், நெருக்கடியான டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் திறன் கொண்டவர். அப்படிப்பட்ட அர்ஷ்தீப்பை நீக்கியது, அணியின் பந்துவீச்சு வியூகத்தில் கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக கடைசி ஓவர்களில் யார் பந்து வீசுவார்கள்? பும்ராவை தவிர கடைசி ஓவரை வீசும் திறனுடைய மற்றொரு பவுலர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியின் இந்த முடிவால், தற்போது டெத் ஓவர்களில் பந்துவீசும் முக்கிய பொறுப்பு ஜஸ்பிரித் பும்ரா-வுடன் சேர்ந்து 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்டியா-வின் தோள்களில் விழுந்துள்ளது. ஹர்திக் பாண்டியா புதிய பந்தில் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், கடைசி கட்ட ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் அவர் திணறி வருவது கவலைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கு முந்தைய பாகிஸ்தான் போட்டியிலும், கடைசி கட்ட ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவும் ரன்களைக் கட்டுப்படுத்த தவறினார். இது போன்ற சூழலில், அர்ஷ்தீப் சிங் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைய வாய்ப்புள்ளது.
இந்திய அணி நிர்வாகம், கடந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய அதே வெற்றி கூட்டணியை நம்பி இந்த முடிவை எடுத்திருக்கலாம். துபாய் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியுள்ளது. ஹர்திக் பாண்டியா இந்த சவாலை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே, போட்டியின் முடிவு அமையும்.
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி.
சயிம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், ஃபக்கர் ஜமான், சல்மான் அகா (கேப்டன்), ஹுசைன் தலாத், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது.