துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை மூன்றாவது முறையாக வீழ்த்தி, தனது 9வது பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றி ஒருபுறம் இருக்க, போட்டிக்குப் பிந்தைய கோப்பை வழங்கும் விழாவில், தோல்வியின் விரக்தியைத் தாங்கிக்கொள்ள முடியாத பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா, இரண்டாம் இடத்திற்கான பரிசுத் தொகையை (Cheque) தூக்கி எறிந்த சம்பவம், பெரும் சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதின. குரூப் சுற்று, சூப்பர் 4 சுற்று மற்றும் இறுதிப் போட்டி என மூன்று முறையிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இதில் இறுதிப் போட்டி மட்டுமே கடைசி ஓவர் பரபரப்பு வரை சென்றது. மற்ற இரண்டு போட்டிகளில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இது தான் பாகிஸ்தான் கேப்டனின் விரக்திக்கு காரணமாக இருந்தது.

போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவின் முகத்தில் தோல்வியின் விரக்தி அப்பட்டமாகத் தெரிந்தது. இரண்டாம் இடத்திற்கான பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ள அவர் மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிடமிருந்து பரிசுத் தொகையைப் பெற்றுக்கொண்ட சில நொடிகளிலேயே, தனது விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக, அந்தச் செக்கை அவர் அங்கேயே தூக்கி எறிந்தார். அவரது இந்தச் செயல், அங்கிருந்த அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பரிசளிப்பு விழாவில் தோல்வி குறித்துப் பேசிய அவர், "இதை ஜீரணிப்பது மிகவும் கடினம். பேட்டிங்கில் நாங்கள் சரியாக முடிக்கவில்லை. பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டோம், ஆனால் பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக முடித்திருந்தால், கதை வேறுவிதமாக இருந்திருக்கும்," என்றார்.
"எங்களது பேட்டிங்கை நாங்கள் சரிசெய்தாக வேண்டும். எங்களது பந்துவீச்சு அபாரமாக இருந்தது, ஆனால் பேட்டிங் ஒரு கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இருப்பினும், என் அணியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்" என்றும் அவர் கூறினார்.
இந்த இறுதிப் போட்டியைப் பொறுத்தவரை, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு, ஃபக்கர் ஜமான் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஜோடி அபாரமான தொடக்கத்தை அளித்தது. ஒரு கட்டத்தில், பாகிஸ்தான் அணி மிக வலுவான ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், குல்தீப் யாதவ் தலைமையிலான இந்தியச் சுழற்பந்து வீச்சாளர்கள், மிடில் ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், வெறும் 33 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து, 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, துவக்கத்தில் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரின் விக்கெட்டை இழந்து தடுமாறியது. 4 ஓவர்களுக்குள் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், திலக் வர்மாவும், சஞ்சு சாம்சனும் இணைந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர்.
சாம்சனின் விக்கெட்டுக்குப் பிறகு, திலக் வர்மாவுடன் இணைந்த சிவம் துபே, தேவையான நேரங்களில் சிக்ஸர்களை விளாசி, வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார். மறுமுனையில் இறுதி வரை நிதானமாக ஆடிய திலக் வர்மா, ரிங்கு சிங்குடன் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம், இந்திய அணி தனது ஒன்பதாவது ஆசிய கோப்பையை வென்று, ஆசியாவின் ராஜாவாக மீண்டும் மகுடம் சூடியது.