துபாய்: 2025 ஆசிய கோப்பையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக, இரு அணி பயிற்சியாளர்களுக்கு இடையேயான வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. "முகமது நவாஸ் தான் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்" என்று பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறிய கருத்துக்கு, இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்சேட் தக்க பதிலடி கொடுத்து, பாகிஸ்தான் முகாமின் வாயை அடைத்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே களத்திற்கு வெளியே நடக்கும் வார்த்தை போருக்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், போட்டிக்கு முன்னதாக பேசிய மைக் ஹெசன், தனது அணியின் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸை வானளாவப் புகழ்ந்தார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடர் நாயகன் விருதையும் நவாஸ் வென்றிருந்தார். இதைச் சுட்டிக்காட்டிய ஹெசன், "நவாஸ் தான் தற்போது உலகின் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர்" என்று கூறி, இந்திய அணிக்கு உளவியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க முயன்றார்.

மைக் ஹெசனின் இந்தக் கருத்து குறித்து இந்திய துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்சேட்டிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகவும் கூர்மையாகவும், நாகரிகமாகவும் பதிலடி கொடுத்தார்.
"ஆசிய கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. அவர்கள் (பாகிஸ்தான்) தங்கள் வீரர்களை எங்கு வேண்டுமானாலும் தரவரிசைப்படுத்திக் கொள்ளட்டும். எங்கள் வீரர்களின் திறமை என்ன என்பது எங்களுக்குத் தெரியும்" என்று ரியான் டென் டோஸ்சேட் கூறினார்.
ரியானின் இந்தப் பதில், "உங்கள் வீரரைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள், அவர்களை உலகிலேயே நம்பர் 1 வீரர் என்று கூட சொல்லுங்கள், எங்கள் வீரர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும், களத்தில் பார்த்துக்கொள்ளலாம்" என்பதுபோல அமைந்திருந்ததால், பாகிஸ்தான் தரப்புக்கு இது ஒரு மூக்கறுப்பாகவே பார்க்கப்படுகிறது.
முகமது நவாஸ் ஓமனுக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். மறுபுறம், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சமீப காலமாக அபாரமான ஃபார்மில் உள்ளனர். குறிப்பாக, வருண் சக்கரவர்த்தி அணிக்குத் திரும்பியதிலிருந்து, வெறும் 13 டி20 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மை விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராகத் திகழ்கிறார்.
இந்த வார்த்தைப் போர், களத்தில் நடக்கவிருக்கும் போட்டிக்கு மேலும் சூட்டைக் கூட்டியுள்ளது. நவாஸின் சுழலா அல்லது இந்திய சுழல் கூட்டணியின் திறமையா? எது வெல்லப் போகிறது? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.