துபாய்: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை குரூப் சுற்றுப் போட்டியின் முடிவில் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவின் கருத்துகள், "அரசியல் ரீதியானது" என்று குற்றம் சாட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
செப்டம்பர் 14 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த முதல் போட்டிக்குப் பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது அணியின் வெற்றியை 'ஆபரேஷன் சிந்தூர்'-ல் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும், பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள்தான் தற்போது சர்ச்சையின் மையமாக மாறியுள்ளது.
சூர்யகுமார் யாதவின் இந்தக் கருத்துகள், விளையாட்டு வீரருக்கான நடத்தை விதிகளை மீறுவதாகவும், கிரிக்கெட்டில் அரசியலைக் கலப்பதாகவும் பிசிபி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது. இந்தப் புகார் எப்போது அளிக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஒரு சம்பவம் நடந்த ஏழு நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.

இந்த புகாரை அடுத்து, ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'தைனிக் ஜாக்ரன்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியின்படி, சூர்யகுமாரின் கருத்துகள் கிரிக்கெட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக நடுவர் ரிச்சர்ட்சன் கருதுவதாகவும், அதனால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை, இந்திய கேப்டன் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் பட்சத்தில், நடுவர் ரிச்சர்ட்சன், சூர்யகுமார் யாதவ் மற்றும் பிசிபி பிரதிநிதி ஆகியோர் கலந்துகொள்ளும் அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்படும். மாறாக சூர்யகுமார் யாதவ் குற்றத்தை ஒப்புக்கொண்டால் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன் தண்டனை அளிக்கப்பட்டால் சிக்கல் ஏற்படும். ஏனெனில், சூர்யகுமாருக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்தப் புகார், பிசிசிஐயின் புகாருக்குப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. முன்னதாக, பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் ஆத்திரமூட்டும் வகையில் சைகைகள் செய்ததாக பிசிசிஐ, ஐசிசியிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, பிசிபி, இந்திய கேப்டன் மீது புகார் அளித்துள்ளது, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையேயான மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
இந்தச் சர்ச்சை எரிந்துகொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோஷின் நக்வி, தனது 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் மறைமுகமாக ஒரு பதிவை வெளியிட்டு, மேலும் சர்ச்சையைத் தூண்டியுள்ளார். அவர், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது போல சைகை செய்யும் ஸ்லோ-மோஷன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இது, ஹாரிஸ் ரவுஃப் களத்தில் செய்த சர்ச்சைக்குரிய சைகையை ஆதரிப்பது போல அமைந்துள்ளது.
களத்தில் நடந்த வீரர்கள் மோதல், கைகுலுக்கல் சர்ச்சை, பரஸ்பரப் புகார்கள் என இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடர், கிரிக்கெட்டைத் தாண்டி பெரும் சர்ச்சைக் களமாக மாறியுள்ளது. இந்திய அணி ஏற்கனவே வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது.