துபாய்: 19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பரம எதிரியான பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய ஜூனியர் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது. பேட்டிங்கில் ஆரோன் ஜார்ஜ் அரைசதம் விளாசி உதவ, பந்துவீச்சில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌஹான் ஆகியோர் பாகிஸ்தான் பேட்டிங் வரிசையைச் சிதறடித்தனர்.
துபாயில் நடைபெற்ற குரூப்-ஏ லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் போட்டியில் அமீரகத்தை வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு, கடந்த போட்டியின் நாயகனான வைபவ் சூர்யவன்ஷி (5 ரன்கள்) இம்முறை ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ஆயுஷ் மத்ரே 38 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி சற்று தடுமாறியது.
இந்த இக்கட்டான நேரத்தில் 3-வது வீரராகக் களமிறங்கிய ஆரோன் ஜார்ஜ், நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடினார். பாகிஸ்தான் பந்துவீச்சை நிதானமாகவும், அதே சமயம் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் விரட்டினார். 88 பந்துகளைச் சந்தித்த அவர், 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 85 ரன்கள் குவித்து அணியை மீட்டார்.
இவருக்குத் துணையாக கனிஷ்க் சௌஹான் 46 ரன்கள் (46 பந்துகள்) எடுத்து கைகொடுத்தார். இருப்பினும், பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 46.1 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் முகமது சையாம் மற்றும் அப்துல் சுபான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
241 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பமே அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். குறிப்பாக, இந்திய பந்துவீச்சாளர் தீபேஷ் தேவேந்திரன் பாகிஸ்தானின் டாப் ஆர்டரை நிலைகுலையச் செய்தார். அவரது பந்துவீச்சில் சமீர் மின்ஹாஸ் (9), அலி ஹாசன் (0), அகமது ஹுசைன் (4) ஆகியோர் வரிசையாக வெளியேறினர்.
மறுமுனையில் கனிஷ்க் சௌஹான் உஸ்மான் கானை (16) வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 30 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 30 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து படுதோல்வியின் விளிம்பிற்குச் சென்றது.
பாகிஸ்தான் அணியின் ஹுசைஃபா அஹ்சன் மட்டும் தனி ஆளாகப் போராடினார். விக்கெட்டுகள் மறுமுனையில் விழுந்து கொண்டிருந்தாலும், அவர் அதிரடியாக ஆடி 83 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். ஆனால் அவருக்குத் துணையாக நிற்க ஆளில்லாததால், பாகிஸ்தான் அணியால் இலக்கை நெருங்க முடியவில்லை.
இறுதியில் பாகிஸ்தான் அணி 41.2 ஓவர்களில் 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்தியத் தரப்பில் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டனர். தீபேஷ் தேவேந்திரன் 7 ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைத்தார்.
கனிஷ்க் சௌஹான் பேட்டிங்கில் 46 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, பந்துவீச்சிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்-ரவுண்டராக ஜொலித்தார். கிஷன் குமார் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அண்டர்-19 அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. நெருக்கடியான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இளம் வீரர்களுக்குப் பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது.