பாகிஸ்தானை பொளந்த இந்தியன் ராயல்ஸ்.. ஏசியன் லெஜண்ட்ஸ் லீக் தொடரில் நடந்த தரமான சம்பவம்
மும்பை: ஏசியன் லெஜண்ட்ஸ் லீக் 2026 கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில், பாகிஸ்தான் பாந்தர்ஸ் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியன் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று (ஆகஸ்ட் 2) நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் நமன் ஓஜா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் பாந்தர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் கேப்டன் இம்ரான் நசீர் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். தௌபீக் உமர் 39 ரன்களும், இப்ரார் அதா 39 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்திய அணியின் பந்துவீச்சில் சுபோத் பாதி மற்றும் ஷதாப் ஜகாதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதை அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் ஆடிய இந்தியன் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பம் சாதகமாக அமையவில்லை. கேப்டன் நமன் ஓஜா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அபிஷேக் ஜடோலா 31 ரன்கள் எடுத்து உதவினார். தொடர்ந்து சுபோத் பாதி மற்றும் ரிஷி தவான் ஜோடி இணைந்து அணியை மீட்டது. அதிரடியாக விளையாடிய ரிஷி தவான் 32 பந்துகளில் அரைசதம் கடந்து, ஒட்டுமொத்தமாக 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சுபோத் பாதி 29 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் முகமது இர்பான், அலி ரஹத் மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். ஃபர்மான் அகமது 0 ரன்னிலும், ஷதாப் ஜகாதி 4 ரன்னிலும் ஆட்டமிழந்ததால் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது. ஆனால், கடைசி நேரத்தில் களமிறங்கிய அனுரித் சிங் பதற்றமின்றி விளையாடி, வெறும் 4 பந்துகளில் 12 ரன்கள் விளாசி இந்திய அணியை 17.3 ஓவர்களிலேயே 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுக்க வைத்து வெற்றியைத் தேடித்தந்தார்.
பந்துவீச்சில் 1 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் 50 ரன்கள் எடுத்து ஆல்-ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திய ரிஷி தவான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் இந்திய அணி பெறும் 2-வது தொடர் வெற்றி இதுவாகும்.


Click it and Unblock the Notifications
