கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தத் தோல்வியின் வலியே இன்னும் பாகிஸ்தான் ரசிகர்களுக்குத் தீரவில்லை. அதற்குள் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் கூறிய கருத்து, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பரம எதிரிகள் என்று அழைக்கப்படுவது குறித்துப் பேசிய அக்சர் படேல், பாகிஸ்தானை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்ற ரீதியில் பதிலளித்துள்ளார்.

போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்சர் படேல், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நாங்கள் பாகிஸ்தானை மற்றுமொரு அணியாக மட்டுமே பார்க்கிறோம். எங்களுக்குள் போட்டி இருக்கிறது, அது இது என்றெல்லாம் நாங்கள் யோசிப்பதே இல்லை. முழுக்க முழுக்க கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்."
"நான் களத்தில் இருக்கும்போது எதிரணி யார் என்று பார்ப்பதில்லை. பந்துவீச வந்தோம், நன்றாக விளையாடினோம், வெற்றி பெற்றோம். அவ்வளவுதான். இதில் பரம எதிரி என்பதெல்லாம் ஒன்றும் இல்லை" என்று மிகவும் சாதாரணமாகக் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே மைதானத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் களத்தில் போட்டி என்று வந்ததும், அது ஒருப்பக்க ஆட்டமாகவே முடிந்தது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி எளிதாக வெற்றியைப் பறித்தது.
ஏற்கனவே கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஆசியக் கோப்பைத் தொடரின்போதும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். "இரு அணிகளும் சமபலத்துடன் மோதி, வெற்றி தோல்வி மாறி மாறி வந்தால்தான் அதை போட்டி என்று சொல்ல முடியும். ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை" என்று அவர் கூறியிருந்தார்.
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை 9 முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியுள்ளன. இதில் 8 முறை இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. இப்படித் தொடர்ந்து இந்தியாவிடம் மண்ணைக் கவ்வும் பாகிஸ்தான் அணியை, இன்னும் பரம எதிரி என்று அழைப்பது அர்த்தமற்றது என்பதை அக்சர் படேலின் பேச்சு உணர்த்துகிறது.