துபாய்: பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் மிட் ஆன் திசையில் நின்ற இந்திய அணியின் அக்சர் படேல் கைகளுக்கு நேராக அடித்துவிட்டு, ஒரு ரன் ஓட முயற்சித்தார். அப்போது பந்தை கைகளில் எடுத்த அக்சர் படேல் நேராக ஸ்டம்புகளை நோக்கி த்ரோ அடித்து ரன் அவுட் செய்த சம்பவம் இந்திய ரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம் உல் ஹக் - பாபர் அசாம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை முகமது ஷமி வீசினார்.

முதல் ஓவரிலேயே முகமது ஷமி 5 ஒய்டுகள் உட்பட 11 பந்துகளை வீசினார். இதனால் பாகிஸ்தான் அணி ரசிகர்கள் குஷியாகினர். ஹர்சித் ராணாவும் சில ஒய்டுகளை வீச, பாகிஸ்தான் அணி எந்தவித அழுத்தமும் இல்லாமல் எளிதாக ரன்களை சேர்த்தது. இதனிடையே முகமது ஷமியின் கால்களில் காயம் ஏற்பட, உடனடியாக ஓய்வறையை நோக்கி நடந்தார்.
இதனால் இந்திய அணிக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டது. 7வது ஓவரிலேயே ஹர்திக் பாண்டியாவை அட்டாக்கில் கொண்டு வர வேண்டிய நிலை வந்தது. அதன்பின் அக்சர் படேல் ஓவரில் பாபர் அசாம் உற்சாகமாக டவுன் தி ட்ராக் இறங்கிவிட்டு பவுண்டரியை விளாசினார். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 41 ரன்களை எட்டிய நிலையில், ஹர்திக் பாண்டியா பவுலிங்கில் பாபர் அசாம் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டை கஷ்டப்பட்டு பவுலிங் செய்யும் அணி வீழ்த்திவிட்டால், அடுத்த விக்கெட் தானாக வரும் என்பார்கள். அதுபோல் 10வது ஓவரை வீச குல்தீப் யாதவ் அழைக்கப்பட்டார். அவரின் பவுலிங்கை கணிக்க முடியாமல் இமாம் உல் ஹக் தடுமாறினார். ஏற்கனவே அவர் நிதானமாகவே ரன்கள் சேர்த்து அதிக டாட் பால்களை ஆடி வந்தார்.
இந்த நிலையில் குல்தீப் யாதவிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்று மிட் ஆன் திசையில் நின்றிருந்த அக்சர் படேலின் கைகளுக்கு பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடினார். பந்தை பிடித்த அக்சர் படேல் நேராக ஸ்டம்பை தெறிக்கவிட்டார். இதனால் இமாம் உல் ஹக் 26 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து பெவிலியனை நோக்கி நடந்தார். இதனால் 47 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனை மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் பார்த்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஒரு ரன் எடுக்க வேண்டும் என்ற முயற்சியில் ஒரு விக்கெட்டை பறிகொடுத்த விரக்தியை அவர்கள் தங்களின் ரியாக்ஷனில் காட்டினர். அதேபோல் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.