கொழும்பு : இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியின் போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் டிஆர்எஸ் கேட்க மறுத்த சம்பவம் ரசிகர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, சுப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தனர்.

14 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை கடந்ததால் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் பதட்டத்தில் இருந்தார். அதன் பின் ரோஹித் சர்மா 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதை அடுத்து பாகிஸ்தான் தன் ஆதிக்கத்தை செலுத்தத் துவங்கி இருந்தது.
அப்போது விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் பேட்டிங் ஆடி வந்தனர். 24வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஹாரிஸ் ரௌப் வீசிய பந்து கே எல் ராகுல் காலில் பட்டது. ஹாரிஸ் உடனடியாக எல்பிடபுள்யூ விக்கெட் கேட்டு அம்பயரிடம் முறையிட்டார். அம்பயர் அதை மறுத்து விட்டார்.
அடுத்து கேப்டன் பாபர் ஆசாமிடம் முறையிட்டு டிஆர்எஸ் கேட்குமாறு கூறினார் ஹாரிஸ். ஆனால், ராகுலுக்கு நேராக லெக் திசையில் பீல்டிங் நின்று இருந்த பாபர் ஆசாம், பந்து முட்டிக்கு மேலே சென்றதாக சைகை காட்டினார்.

எனினும், டிஆர்எஸ் கேட்க வேண்டிய 30 வினாடிகள் முழுவதும் ஹாரிஸ் ரௌப் கேப்டனை சமாதானம் செய்து அதை ஒப்புக் கொள்ள வைக்க நினைத்தார். ஆனாலும், அந்த வலையில் சிக்காமல் தப்பினார் பாபர் ஆசாம்.
முன்னதாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்து டிஆர்எஸ் கேட்க சொன்னதை நம்பி கேட்ட பாபர் ஆசாமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதை அடுத்து மீண்டும் ஒரு முறை சுழற் பந்துவீச்சாளர் ஷதாப் கான் எட்ஜ் ஆனதாகக் கூறி டிஆர்எஸ் கேட்க கூறினார். அப்போது அதை மறுத்த பாபர் ஆசாம், மீண்டும் ஹாரிஸ் அடுத்த ஓவரிலேயே டிஆர்எஸ் கேட்குமாறு கூற, தப்பித்தால் போதும் சாமி என டிஆர்எஸ் கேட்க மறுத்து தப்பித்தார்.