கொழும்பு: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள பாபர் அசாம் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக டி20 உலககோப்பை 2026 தொடரில் 5 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறி இருப்பது அந்நாட்டு ரசிகர்கள் இதயத்தை சுக்குநூறாக உடைத்து இருக்கிறது.
உலக கிரிக்கெட்டில் விராட் கோலி உடன் அடிக்கடி ஒப்பிடப்படும் வீரர் பாபர் அசாம் இந்த ஒப்பீட்டை பாகிஸ்தான் ரசிகர்களை தவிர வேறு யாரும் செய்ய மாட்டார்கள். விராட் கோலி போல் பாபர் அசாம் விளையாடுவார் என்று கூறினால், உடனே அங்கு இருப்பவர்கள் சிரித்து விடுவார்கள்.

அப்படி பெயர் பெற்ற பாபர் அசாம் இந்தியாவுக்கு எதிராக கடுமையாக தடுமாறி இருக்கிறார். இதுவரை இந்தியாவுக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி உள்ள பாபர் அசாம், ஒரு அரை சதம் உட்பட மொத்தமாகவே 105 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். இந்தியாவுக்கு எதிராக அவருடைய சராசரி 26 என்ற அளவிலும், ஸ்ட்ரைக் ரேட் 128 என்ற அளவில் இருக்கிறது.
பாபர் அசாம், கடைசியாக இந்தியாவுக்கு எதிராக 2024 டி20 உலக கோப்பையில் நடந்த ஆட்டத்தில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.அப்போது பாகிஸ்தான் அணி வெறும் 120 ரன்கள் என்ற இலக்கை தான் துரத்தியது. இந்த சூழலில் இந்த சோகமான வரலாற்றை பாபர் அசாம் மாற்றுவார் என அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர்.
176 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி துரத்திய போது ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஃபர்கான் டக் அவுட் ஆகியும் சையும் அயூப் 6 ரன்களிலும், கேப்டன் சல்மான் ஆகா நான்கு ரன்களிலும் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 13 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பாபர் அசாம் மற்றும் உஸ்மான் கான் ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பாபர் அசாம், தன் வாழ்நாளில் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி தனது பெயரை காப்பாற்றுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அக்சர் பட்டேல் வீசிய பந்தில் அவர் கிளீன் போல்ட் ஆகி 7 பந்துகளில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே சேர்த்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 34 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது.