லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஏற்பட்டுள்ள தற்போதைய குழப்பங்களுக்கும், பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாட மறுப்பதற்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தான் முழுக் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதன் ஆணிவேர் ஐபிஎல் தொடரில் தான் உள்ளது என்று பாசித் அலி புகார் கூறி இருக்கிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் 9.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான், அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பிசிசிஐ-யின் உத்தரவின் பேரில் ஜனவரி தொடக்கத்தில் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதுதான் பிரச்சனையின் தொடக்கம் என்று பாசித் அலி குற்றம் சுமத்தி இருக்கிறார்.
தனது யூடியூப் பக்கத்தில் இது குறித்துப் பேசிய அவர், "பிசிசிஐ செய்த ஒரு தவறுதான் இத்தனைக்கும் காரணம். முஸ்தபிசுர் ரஹ்மானை ஐபிஎல் அணியிலிருந்து விடுவித்ததில் அவர்கள் அவசரம் காட்டிவிட்டார்கள். உலகக்கோப்பை முடியும் வரை அவர்கள் பொறுத்திருந்திருக்கலாம். அவர்கள் முன்கூட்டியே எடுத்த அந்த முடிவுதான் வங்கதேசத்தைக் கோபப்படுத்தியது" என்று கூறினார்.
முஸ்தபிசுர் ரஹ்மான் விவகாரத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வங்கதேச அணி இந்தியா வர மறுத்தது. இதனால் ஐசிசி வங்கதேசத்தை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியைச் சேர்த்தது. இப்போது வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது. "பிசிசிஐ அன்று அந்தத் தவறைச் செய்யாமல் இருந்திருந்தால், வங்கதேசம் விலகியிருக்காது. இப்போது பாகிஸ்தானும் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்காது" என்று பாசித் அலி சாடியுள்ளார்.
போட்டியைப் புறக்கணித்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நிதி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுவது குறித்துப் பேசிய அவர், "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நிதி நெருக்கடி வராது. அரசாங்கம் சொல்லித் தான் அவர்கள் விளையாட மறுக்கிறார்கள். எனவே, வாரியத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை அரசே ஈடுகட்டிவிடும்" என்று அவர் கூறினார். பிப்ரவரி 15ஆம் தேதி போட்டி நடைபெறாவிட்டால் இந்திய அணிக்கு வெற்றி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் பிசிசிஐ இந்த பிரச்னையை துவக்கி வைத்ததாக கூறினாலும், வங்கதேசமும், பாகிஸ்தானும் இந்த உப்புசப்பில்லாத விஷயத்தை ஊதி பெரிதாக்கி தங்கள் நாட்டு அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி வருவதையும் மறுக்க முடியாது. வங்கதேசமும், பாகிஸ்தானும் இது போல மோசமான நாடகங்களை நடத்துவார்கள் என்பதை கணிக்கத் தவறியதே பிசிசிஐ செய்த தவறாகும்.