கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அந்த நாட்டின் கிரிக்கெட் அமைப்பு செய்து வரும் நிலையில், இந்திய அணியை, பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என பிசிசிஐ மறைமுகமாக அழுத்தம் கொடுக்க துவங்கியிருக்கிறது.
அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கொதிப்பில் இருக்கிறது. இன்னும் எட்டு மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், அதற்கான உத்தேச அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பி உள்ளது. அந்த உத்தேச அட்டவணையை ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் சர்வதேச கிரிக்கட் கவுன்சில் அனுப்பி ஒப்புதல் கேட்டது.

பாகிஸ்தான் நாட்டில் இந்திய அணி ஆடும் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ ஏற்றுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்திய அரசு, இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் அனுப்ப ஒப்புக் கொள்ளாது என்பதால் இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.
ஒரு வேளை இந்திய அணி, பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இருந்து விலக முடிவு செய்தால், அதனால் அந்த தொடருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என்பதால், பிசிசிஐ என்ன கேட்கிறதோ, அதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அப்படியே செய்து கொடுக்கும் என்பதே யதார்த்த நிலையாக உள்ளது.
தற்போது திரை மறைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிடம் இந்திய அணி ஆடும் போட்டிகளை துபாயில் நடத்த திட்டமிட வேண்டும் என கூறி இருக்கின்றனர். அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சேர்ந்தவர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே, பாகிஸ்தானில் நடைபெற வேண்டிய 2023 ஆசிய கோப்பையை பிரித்து இலங்கையில் பாதி போட்டிகளை நடத்தியதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், என்ன நடந்தாலும் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் என அவர்கள் கூறி வருகின்றனர்.
மேலும், இந்திய அரசு, இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்பவில்லை என்பதை பிசிசிஐ தான் சொல்கிறது. அவர்கள் அந்த காரணத்துக்காக வர மறுத்தால், இந்திய அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த கடிதத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டும். அதன் பின்னரே நாங்கள் இதைப் பற்றி முடிவு செய்வோம். குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பாவது இந்திய அணி தங்கள் நிலையை எங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரி ஒருவர் பேட்டியளித்து இருக்கிறார். அதனால் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புகளுக்கு இடையேயான உறவு மேலும் மோசமானதாக மாறி உள்ளது.