துபாய்: 2025 ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, வெற்றி பெற்ற இந்திய அணிக்குக் கோப்பையை வழங்காமல், அதைத் தன்னுடன் ஹோட்டலுக்கு எடுத்துச் சென்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோஷின் நக்வியின் செயலுக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
"எங்கள் நாட்டிற்கு எதிராகப் போர் தொடுக்கும் ஒரு நாட்டின் பிரதிநிதியிடமிருந்து நாங்கள் கோப்பையைப் பெற முடியாது," என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா காட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், கோப்பையுடன் அவர் ஓடியதை பற்றி சர்வதேச கிரிக்கெட் அமைப்பிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், வெற்றிக்குப் பிறகும் கோப்பை இந்திய வீரர்களின் கைகளுக்குக் கிடைக்கவில்லை. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருக்கும் மோஷின் நக்வி, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்குப் பெயர் பெற்றவர். எனவே, அவரிடமிருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்ததால் சர்ச்சை வெடித்தது.
இந்தச் சம்பவம் குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா, தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். "இந்தியா ஒரு நாட்டுடன் போரில் ஈடுபட்டுள்ளது, அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் எங்களுக்குக் கோப்பையை வழங்குவதாக இருந்தது. எங்கள் நாட்டிற்கு எதிராகப் போர் தொடுக்கும் ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரிடமிருந்து நாங்கள் கோப்பையை ஏற்றுக்கொள்ள முடியாது."
"எனவே, நாங்கள் அந்தக் கோப்பையை வாங்க மறுத்துவிட்டோம். ஆனால், அதற்காக அந்த ஜென்டில்மேன், எங்கள் நாட்டிற்குக் கொடுக்கப்பட வேண்டிய கோப்பையையும், பதக்கங்களையும் தனது சொந்த ஹோட்டல் அறைக்கு எடுத்துச் செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது முற்றிலும் எதிர்பாராதது. இன்றைய பரிசளிப்பு விழாவில் அந்த ஜென்டில்மேனின் நடத்தைக்கு எதிராக நாங்கள் மிக வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யப் போகிறோம்" என்று சைக்கியா கூறினார்.
மோஷின் நக்வியின் இந்த "விளையாட்டுக்கு ஒவ்வாத" செயலை வன்மையாகக் கண்டித்த சைக்கியா, வரவிருக்கும் ஐசிசி மாநாட்டில் இந்தியா இதுகுறித்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் என்றும் உறுதியளித்தார். "ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரிடமிருந்து 2025 ஆசிய கோப்பை கோப்பையைப் பெற வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். ஆனால், அதற்காக அந்த ஜென்டில்மேன் கோப்பையையும், பதக்கங்களையும் தன்னுடன் எடுத்துச் செல்வார் என்று அர்த்தமல்ல. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் விளையாட்டுக்கு ஒவ்வாதது."
"கோப்பையும் பதக்கங்களும் கூடிய விரைவில் இந்தியாவிற்குத் திருப்பித் தரப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். வரும் நவம்பர் மாதம் துபாயில் ஐசிசி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் இந்தச் செயலுக்கு எதிராக நாங்கள் மிகத் தீவிரமான மற்றும் வலுவான எதிர்ப்பைத் தெரிவிப்போம்," என்று அவர் மேலும் கூறினார்.