துபாய்: இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடங்கிய புறக்கணிப்புப் போராட்டம், தற்போது இந்திய அணியின் வீரர்கள் அறைக்குள்ளேயே நுழைந்து, வீரர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் உள்ளிட்ட இளம் வீரர்கள், சமூக வலைதளங்களில் பரவி வரும் கருத்துக்களால் மன உளைச்சல் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பெரும்பாலான வீரர்கள் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துபவர்கள் என்பதால், இந்தப் புறக்கணிப்புக் குரல்கள் அவர்களை நேரடியாகத் தாக்கி, பெரும் மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அனுபவம் சில வீரர்களுக்கு இருந்தாலும், இந்த முறை எழுந்துள்ள எதிர்ப்பின் தன்மை, அவர்களுக்கும் இது ஒரு அசாதாரண சூழலாகவே மாறியுள்ளது.

இந்த நிலையில், வீரர்கள் அறையில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உடனடியாகக் களத்தில் இறங்கியுள்ளார். வீரர்கள் தாமாகவே முன்வந்து, கௌதம் கம்பீர் மற்றும் மற்ற உதவி பயிற்சியாளர்களிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த இக்கட்டான சூழலை எப்படிச் சிறப்பாகக் கையாள்வது, மனதை எப்படி ஒருமுகப்படுத்துவது என்பது குறித்து அவர்கள் அறிவுரை கேட்டுள்ளனர்.
இந்த ஆலோசனையின்போது கௌதம் கம்பீர் வீரர்களுக்கு மத்தியில் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்சேட் இதுகுறித்து கூறுகையில், "வீரர்களின் உணர்வுகளையும், மக்களின் வலுவான கருத்துக்களையும் நாங்கள் அறிவோம். ஆனால், கம்பீரின் செய்தி மிகவும் தொழில்முறையாக இருந்தது. 'நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். கிரிக்கெட் என்று வரும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். நாளை நடக்கவிருக்கும் ஒரு போட்டியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்' என்று அவர் வீரர்களுக்குக் கூறினார்" என்றார்.
ரியான் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு வீரருக்கும் இந்தச் சூழல் குறித்து வெவ்வேறு விதமான உணர்வுகள் இருக்கலாம். ஆனால், அணியின் ஒட்டுமொத்த செய்தி, கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான்" என்று குறிப்பிட்டார்.
களத்திற்கு வெளியே பெரும் புயல் வீசிக்கொண்டிருக்கும் நிலையில், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தனது வீரர்களை ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து, அவர்களை மனதளவில் தயார்படுத்தி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுள்ளார்.