அகமதாபாத்: பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மற்றும் ஷதாப் கான் இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தை மொத்தமாக இந்திய அணி பக்கம் திருப்பியுள்ளார் பும்ரா.
அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கு முன்பாக பும்ரா இந்திய அணி வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஸ்பீச் ஒன்றை கொடுத்தார். எப்படி சென்னையில் ஜடேஜாவும், டெல்லியில் விராட் கோலியும் கொடுத்தார்களோ, அதேபோல் சொந்த மண்ணில் பும்ரா வீரர்களிடம் திட்டங்களை கூறி உத்வேகம் அளித்தார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 30 ஓவர்கள் முடிவில் 150 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. இதனால் ஆட்டத்தை இந்திய அணி பக்கம் இழுக்க, சிராஜ் கைகளில் பந்தை கொடுத்தார் ரோகித் சர்மா. அப்போது சிராஜ் வீசிய முதல் ஒவரிலேயே பாபர் அசாம் 50 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் உடனடியாக குல்தீப் யாதவை மீண்டும் அட்டாக்கில் கொண்டு வந்தார்.
அவரும் தன் பங்கிற்கு சாவுத் சகீலை 6 ரன்களில் வீழ்த்தினார். இந்த விக்கெட்டின் பெரும் பங்கு ரோகித் சர்மாவுக்கு தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் நடுவர் விக்கெட் கொடுக்காத நிலையில், ரிவ்யூ செய்து விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து அதே ஓவரில் இஃப்திகார் அஹ்மத் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 34 ஓவர்களில் 168 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின் ரோகித் சர்மா உடனடியாக பும்ராவை அட்டாக்கில் கொண்டு வந்தார். அந்த ஓவரின் கடைசி பந்திலேயே முகமது ரிஸ்வான் 49 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் மீண்டும் அடுத்த ஓவரில் ஷதாப் கானை 2 ரன்களில் போல்ட்டாக்கினார். இதனால் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சொந்த மண்ணில் களமிறங்கிய பும்ரா அசத்தலாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.