மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமூக வலைதளங்களில் பரவும் போலிச் செய்திகள் கிரிக்கெட் வீரர்களைப் பெரும் தலைவலியில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடர்பாகத் தனது பெயரில் பரப்பப்பட்ட ஒரு பொய்யான தகவலால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும், அந்த அணியன் உலகக்கோப்பை நாயகனுமான கார்லோஸ் பிராத்வெயிட் கடும் கோபமடைத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் (ட்விட்டர்) தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கிற்கே அவர் நேரடியாகப் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வரும் பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் பந்துவீச்சு முறை குறித்து சர்ச்சை எழுந்து வருகிறது. அவர் சர்வதேச கிரிக்கெட் விதிகளுக்கு மாறாக பந்தை வீசுவதாக ஒரு புகார் உள்ளது.
அதே சமயம், இதற்கு முன் இரண்டு முறை அவர் பந்துவீச்சு பரிசோதனை மேற்கொண்டு அவரது பந்துவீச்சு சரியானது தான் என்பதை நிரூபித்து இருக்கிறார். எனினும், பல ரசிகர்கள் அதை ஏற்கவில்லை. இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் பிராத்வெயிட் கூறியதாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், "இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். உஸ்மான் தாரிக் பந்துவீசும்போது அவர் விதிமுறையை மீறி பந்துவீசினால், இந்தியப் பந்துவீச்சாளர்களும் அதையே செய்ய வேண்டும். எதைக் கொடுக்கிறோமோ, அதுவே திரும்பக் கிடைக்கும். சிம்பிள்" என்று பிராத்வெயிட் கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது பெயரில் பரப்பப்பட்ட இந்த பொய்யான தகவலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிராத்வெயிட், அந்தப் பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "இதை நான் எப்போது சொன்னேன்? இதற்கான ஆதாரம் எங்கே? இது மிகவும் தவறான மற்றும் மோசமான செயல். இந்தப் பதிவை அழிக்க வேண்டாம், நான் இது குறித்து புகார் அளிக்கப் போகிறேன்" என்று அந்த நபரை வறுத்தெடுத்துள்ளார்.
வெறும் கண்டனத்தோடு நிற்காமல், எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை டேக் செய்து கடுமையான கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். அதில், "எலான் மஸ்க் அவர்களே.. பிரபலங்களின் பெயரில் பொய்யான தகவல்களைப் பரப்பும் நபர்களின் கணக்குகளை முடக்க வேண்டும். முக்கியமாக அவர்கள் எக்ஸ் தளம் மூலம் சம்பாதிப்பதை தடுக்க வேண்டும். அவர்கள் எதை வேண்டுமானாலும் பதிவிடுகிறார்கள், சிக்கல் வந்ததும் அழித்துவிடுகிறார்கள். ஆனால் அதற்குள் கிட்டத்தட்ட 2.69 லட்சம் பேர் இதைப் பார்த்துவிட்டு, இதுதான் உண்மை என்று நம்பிவிடுகிறார்கள்" என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார்.
பிராத்வெயிட் மட்டுமல்ல, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவும் அண்மையில் இதுபோல போலிச் செய்தியால் பாதிக்கப்பட்டார். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ராஜீவ் சுக்லா பேசுவது போல ஒரு போலியான ஆடியோ உருவாக்கப்பட்டது. அதில் பாகிஸ்தான் அணியை இந்தியாவுடன் விளையாட வைக்குமாறு பிசிசிஐ ஐசிசியிடம் கெஞ்சுவது போல அந்த ஆடியோ அமைந்திருந்தது. இது முற்றிலும் பொய்யானது என்றும், யாரும் இதை நம்ப வேண்டாம் என்றும் ராஜீவ் சுக்லா விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வர்ணனையாளராகச் செயல்பட்டு வரும் பிராத்வெயிட், இதுபோன்று சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.