துபாய்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஸ்பின்னர் அப்ரார் அகமது நடந்து கொண்ட விதம் இந்திய ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்தது.
உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பேட்ஸ்மேன் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்திய பின் அப்ரார் அகமது மிகப்பெரிய சாதனை செய்தது போல அவரை வழியனுப்பி வைத்தார். கைகளை கட்டி நின்று கொண்டு தான் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டதாக அவர் நடந்து கொண்டார்.

ஆனால் அந்தக் காட்சிகளை இந்திய அணியின் ரசிகர்கள் விரும்பவில்லை. போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் வரை காத்திருந்த இந்திய அணி ரசிகர்கள் அதன் பின் சமூக வலைதளங்களில் அப்ரார் அகமதுவின் நடத்தையை கடுமையாக விமர்சித்தனர்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 241 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது ரோகித் சர்மா அதிரடி துவக்கம் அளித்தாலும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் சுப்மன் கில்லும் வேகமாக ரன் சேர்த்தார்.
விராட் கோலி சற்று நிதானமாகவே ஆடினார். சுப்மன் கில் 46 ரன்கள் எடுத்து அரை சதத்தை நெருங்கிய போது அப்ரார் அகமதுவின் பந்துவீச்சில் பவுல்ட் அவுட் ஆனார். அகமது மிகச் சிறப்பாக பந்து வீசி சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். எதிரில் நின்று இருந்த விராட் கோலியும் அவரது பவுலிங்கை பார்த்து வியந்து அப்ரார் அகமதுவை பாராட்டினார்.
இதனிடையே அப்ரார் அகமது சுப்மன் கில்லை வழியனுப்பும் வகையில் கைகளை கட்டி நின்று கொண்டு அவரை முறைத்துப் பார்த்தார். இந்த சம்பவத்தை தான் இந்த போட்டி முடிந்தவுடன் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியில் மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி இறைத்த போதும் அப்ரார் 10 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இந்தப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்தார். இந்திய அணி 42.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. அப்ரார் அகமது சிறப்பாக பந்து வீசியும் பாகிஸ்தான் அணியால் வெற்றிக்கு அருகே கூட செல்ல முடியவில்லை.