துபாய்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாபர் அசாம் 23 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் பாகிஸ்தான் அணிக்காக மிகப்பெரிய சாதனை ஒன்றை செய்திருக்கிறார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாகவே சரியாக பேட்டிங் செய்வதில்லை என்று விமர்சனத்தை சந்தித்து வந்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் முதல் போட்டியில் ஆமை வேகத்தில் விளையாடி விமர்சனத்தை சந்தித்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் 90 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் 26 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 23 ரன்கள் குவித்த நிலையில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் அமைப்பு நடத்தும் ஒருநாள் தொடர்களில் ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை செய்தார்.
இதற்கு முன் ஜாவேத் மியான்டட் 30 இன்னிங்ஸ்களில் 1083 ரன்கள் எடுத்திருக்கிறார், சயீத் அன்வர் 25 இன்னிங்ஸ்களில் 1204 ரன்கள் எடுத்திருக்கிறார். தற்போது பாபர் அசாம் 24 இன்னிங்ஸ்களில் 1014 ரன்கள் குவித்து ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார். பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்திருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட் சற்று குறைவாக உள்ளது.
அதாவது பாபர் அசாம் ஒருநாள் போட்டிகளிலும் சற்று குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில்தான் ஆடி வருகிறார். அவர் இந்த 1014 ரன்களை 83.1 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில்தான் எட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசாம் 23 ரன்களிலும், இமாம் உல் ஹக் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து பேட்டிங் செய்த சவுத் ஷகீல் மற்றும் கேப்டன் முகமது ரிஸ்வான் சிறப்பாக விளையாடினர். சவுத் ஷகீல் 50 ரன்களை கடந்து ரன் குவித்தார்.