துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரன் குவிக்க திணறியது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் வீரர்கள் டெஸ்ட் மேட்ச் போல ஆடினர்.
அந்த அணியின் துவக்க வீரர் இமாம் உல் ஹக் 26 பந்துகளை சந்தித்து 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் ஆமை வேகத்தில் ஆடியும் ரன் அவுட் ஆனார். அடுத்து பாபர் அசாம் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின் சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணைந்து நிதானமாக ரன் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

சவுத் ஷகீல் அபாரமாக ஆடி அரை சதம் அடித்து 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முகமது ரிஸ்வான் 77 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த வீரர்களில் குஷ்தில் ஷா மட்டுமே கடைசி ஓவர் வரை நின்று ஆடினார். அவர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 43வது ஓவரில் தான் முதல் சிக்ஸை அடித்தது.
பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸில் முதல் 50 ரன்கள் 58 பந்துகளிலும், இரண்டாவது 50 ரன்கள் 98 பந்துகளிலும் கிடைத்தன. அந்த அளவுக்கு இடையே ஆமை வேக பேட்டிங் ஆடினர் பாகிஸ்தான் பெட்ச்மேன்கள். மேலும், இந்த ஒரு இன்னிங்ஸில் இடையே மூன்று முறை தலா 5 ஓவர்கள் இடைவெளியில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படாமல் இருந்தது.
தட்டுத் தடுமாறி ரன் சேர்த்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் முகமது ஷமி கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்தாலும் விக்கெட்கள் ஏதும் வீழ்த்தவில்லை. அவர் 8 ஓவர்களில் 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்களையும், குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 242 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.