துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர்கள் மைதானத்திற்கு வருவதில் பெரும் சிக்கல் எழுந்தது. டாஸ் நிகழ்விற்கு முன் இந்திய அணி மைதானத்தை வந்தடையுமா? என்ற பதற்றம் நிலவியது.
பின்னர் டாஸ் நிகழ்வுக்கு 35 நிமிடங்கள் முன்னதாக மட்டுமே இந்திய வீரர்கள் வந்த பேருந்து மைதானத்தை வந்தடைந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பொதுவாக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடர்களில் விளையாடும் அணிகள் போட்டி நாளன்று சில மணி நேரங்கள் முன்னதாகவே மைதானத்திற்கு வந்து விடுவார்கள்.

அங்கு சிறிது நேரம் உடற்பயிற்சிகளையும், ஃபீல்டிங் பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனால் இந்திய அணிக்கு அதற்கான நேரம் கிடைக்கவில்லை. இந்தப் போட்டி நடந்த துபாய் நகரில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதற்குக் காரணமும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிதான்.
இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் பலரும் வந்ததால் மைதானத்தை சுற்றி இருந்த சாலைகள் போக்குவரத்து நெரிசலால் நிரம்பி வழிந்தன. பாகிஸ்தான் வீரர்கள் வந்த பேருந்தும் இந்த சாலை நெரிசலில் சிக்கி இருந்தது. ஆனால் அவர்கள் இந்திய அணி வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே மைதானத்தை வந்தடைந்து விட்டனர்.
ஆனால், இந்திய அணியின் பேருந்து மோசமான நெரிசலில் சிக்கியது. சரியாக டாஸ் போடுவதற்கு 35 நிமிடங்களுக்கு முன்னதாக இந்திய வீரர்கள் மைதானத்தை வந்தடைந்தனர். இந்திய வீரர்கள் தங்கள் உடைமைகளை எடுத்து வைத்து உடை மாற்றுவதற்கே இந்த நேரம் சரியாக இருந்தது.
இலகுவான பயிற்சி செய்வதற்கான நேரம் கூட இந்திய வீரர்களுக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை இந்திய அணி முதலில் பேட்டிங் செய்திருந்தால் இது பெரிய சிக்கலாக இருந்திருக்காது. ஆனால், இந்திய வீரர்கள் முதலில் பந்து வீச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் இந்திய வீரர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அதிக நேரம் கிடைக்காமல் இந்தப் போட்டியில் விளையாடினர்.