துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் முகமது ஷமி மூன்று ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவர் ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை வீசிக்கொண்டிருந்தபோது கால் வலியால் அவதிப்பட்டார். அத்துடன் அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறியதால் ரசிகர்கள் பரபரப்படைந்தனர்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ஐந்து வைடுகளை வீசி இருந்தார். மேலும், அவரால் 135 கிலோமீட்டர் என்ற வேகத்தை கூட எட்ட முடியவில்லை. 2015-க்குப் பிறகு இப்போதுதான் முகமது ஷமி தனது முதல் ஸ்பெல்லில் இத்தனை குறைவான வேகத்தில் பந்து வீசுகிறார் என்ற புள்ளிவிவரமும் வெளியானது.

எனினும், அடுத்த ஓவர்களில் சமாளித்த ஷமி தான் வீசிய ஆட்டத்தின் 3வது ஓவரில் 4 ரன்களும், 5 வது ஓவரில் 3 ரன்களும் மட்டுமே கொடுத்தார். ஐந்தாவது ஓவரை வீசியபோது அவரது கணுக்காலில் ஏற்பட்ட வலியின் காரணமாக உடனடியாக பிசியோதெரபிஸ்ட் அவரை பரிசோதித்தார். சில நிமிடங்கள் கழிந்தன. அதன் பின் அந்த ஓவர் முடிந்தவுடன் ஷமி ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
ஹர்திக் பாண்டியா ஏழாவது ஓவரை வீசினார். ஷமி இல்லாததால் பகுதி நேர பந்துவீச்சாளரான ஹர்திக் பாண்டியா அவரது பணியை செய்தார். இனி இந்தப் போட்டியில் ஷமியால் பந்து வீச முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் ஆட்டத்தின் 12வது ஓவரின் போது களத்துக்கு வந்த ஷமி அபாரமாக பந்து வீசினார்.
முதல் மூன்று ஓவர்களை வீசிய போது சராசரியாக 131 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய அவர் மீண்டும் வந்த போது 138 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார். மேலும், 12 மற்றும் 14வது ஓவர்களை வீசிய ஷமி மொத்தமாக 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். முதல் 14 ஓவர்களில் 5 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டுமே கொடுத்து இருந்தார்.
முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸில் தோல்வி அடைந்ததன் மூலம், தொடர்ந்து 12-வது முறையாக ஒருநாள் போட்டிகளில் டாஸ்ஸில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம், இமாம் உல் ஹக் துவக்கம் அளித்தனர். ஹர்திக் பாண்டியா வீசிய 9வது ஓவரில் பாபர் அசாம் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.