துபாய்: இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். துபாய் மைதானத்தில் 2வது பேட்டிங் செய்யும் அணிக்கு சிக்கல் இருக்கும் என்பதால், பாகிஸ்தான் அணி இந்த முடிவு எடுத்துள்ளது. அதேபோல் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் பாகிஸ்தான் அணி முதல் பேட்டிங் ஆடியது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேபோல் கடைசியாக நடைபெற்ற 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றியை பெற்றது.

அந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். இந்த நிலையில் துபாய் மைதானத்தில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இதன்பின் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பேசுகையில், முதல் பேட்டிங் செய்கிறோம். பேட்டிங்கிற்கு ஏற்ற பிட்ச் போல் தெரிகிறது. இந்திய அணிக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். ஐசிசி தொடரில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இருந்தாலும் அழுத்தத்தை உணர விரும்பவில்லை. இந்த சூழல் எங்கள் வீரர்களுக்கு பரீட்சியமானதுதான். இங்கு எப்போதும் நன்றாக ஆடி இருக்கிறோம்.
இன்றும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். கடந்த ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லை. அதில் எதுவும் மாற்ற முடியாது. பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் காயம் காரணமாக ஜமான் விலகியதால், அவரது இடத்தில் இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து ரோஹித் சர்மா பேசுகையில், டாஸ் பற்றி கவலையில்லை. ஏனென்றால் அவர்கள் டாஸ் வென்றுவிட்டார்கள். அதனால் இந்தியா பவுலிங் செய்ய வேண்டும்.
கடந்த ஆட்டத்தை போல் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவானதாக தெரிகிறது. பேட்டிங் யூனிட் சிறந்த அனுபவ வீரர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் ஸ்லோ பிட்ச்களில் என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு அணியாக அனைவரின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. கடந்த ஆட்டம் எங்களுக்கு எளிதான ஒன்றாக அமையவில்லை. இந்திய பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்திய பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஹர்சித் ராணா
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: இமாம் உல் ஹக், பாபர் அசாம், சாவுக் சக்கீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, தயப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், அப்ரார் அஹ்மத்