துபாய்: துபாயில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் போது பாகிஸ்தான் ரசிகர்கள் விராட் கோலியின் பெயர் உள்ள ஜெர்சியை அணிந்து வந்தனர். இதில் ஆச்சரியம் என்னவெனில் அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்து அதில் விராட் கோலியின் பெயரைப் பதித்து வந்திருந்தனர்.
குறிப்பாக சிலர் "கிங் கோலி" என்ற பெயரை அச்சிட்டு இருந்தனர். இதன் மூலம் தாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ரசிகர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் விராட் கோலியின் ரசிகர்கள் என்பதை உணர்த்தினர். பாகிஸ்தானில் விராட் கோலிக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியது.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. துபாயில் நடந்த இந்தப் போட்டியைப் பார்க்க இரு அணிகளின் ரசிகர்களும் நேரில் வந்திருந்தனர். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்ததாக இந்திய அணி ஆடியபோது விராட் கோலி அபாரமாக ஆடினார். ஃபார்ம் இழந்ததாக சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்தப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி ரன் குவித்தார். அப்போது மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் விராட் கோலிக்கு உற்சாகம் அளித்து வந்தனர். அது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சில பாகிஸ்தான் ரசிகர்களின் ஜெர்ஸியைப் பார்த்தபோது அது பாகிஸ்தானின் ஜெர்ஸியைப் போல பச்சை நிறத்தில் இருந்தாலும் பெயர் மட்டும் விராட் கோலி மற்றும் கிங் கோலி எனவும், விராட் கோலியின் எண்ணான 18 என்பதும் பொறிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படும் நிலையில், அவரை காட்டிலும் விராட் கோலிக்கு பாகிஸ்தானில் ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என சமீபத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த பல யூடியூப் சேனல்களில் ரசிகர்கள் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை என்ற முடிவுடன் இருப்பதால் இந்தப் போட்டி துபாயில் நடைபெற்றது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முழுவதும் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் நிலையில் அதில் இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகின்றன.