கராச்சி: 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், பிசிசிஐ பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப முடியாது என மறைமுகமாக அழுத்தம் கொடுக்க துவங்கி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐ-யின் முடிவுக்கு எதிராக கொந்தளித்து இருக்கிறது.
2008 ஆம் ஆண்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்வதை நிறுத்தியது. அப்போது முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இல்லை. ஆசிய கோப்பை, உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற உலக நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே இரண்டு அணிகளும் மோதி வருகின்றன.

இந்த நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளது. நீண்ட காலத்திற்குப் பின் ஒரு உலக அளவிலான கிரிக்கெட் தொடரை நடத்த இருப்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மகிழ்ச்சியில் இருக்கிறது. இந்த தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கிரிக்கெட் மைதானங்களை புதுப்பித்து வருகிறது. அதற்காக பல கோடிகளை செலவு செய்து வரும் நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணி செல்லாது என பிசிசிஐ அழுத்தம் கொடுத்து இருக்கிறது.
இந்திய அணி ஆடும் போட்டிகளை மட்டும் பாகிஸ்தானிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கை போன்ற வேறு நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கோரிக்கை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இதே போன்ற நிலையே ஏற்பட்டது. அப்போதும் பாகிஸ்தானில் நடக்க வேண்டிய ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்க மறுத்ததால் இந்திய அணி ஆடும் போட்டிகள் இலங்கையில் நடந்தன. அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு நஷ்டத்தை சந்தித்ததாக புகார் கூறியிருந்தது.
தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இணைந்து நடத்த உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் பிசிசிஐ வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு கொந்தளித்து இருக்கிறது.
இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் அதிகாரி ஒருவர், "நாங்கள் எங்கள் கிரிக்கெட் மைதானத்தை புதுப்பிக்கவும், தரம் உயர்த்தவும் பல கோடிகளை செலவிட்டு வருகிறோம். நிச்சயமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நாட்டுக்கு வெளியே நடத்த அனுமதிக்க மாட்டோம். இந்தியா என்ன முடிவை எடுத்தாலும், பாகிஸ்தானில் தான் சாம்பியன்ஸ் ட்ராபி நடக்கும்" என கூறி இருக்கிறார்.
ஆனால், நடைமுறையில் இதில் ஒரு சிக்கல் உள்ளது. இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்து சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இருந்து விலகினால், அதனால் இந்த தொடருக்கு மிகப் பெரும் நஷ்டம் ஏற்படும். இந்திய அணி பங்கேற்காவிட்டால் ஒளிபரப்பு உரிமம், விளம்பர வருவாய் போன்றவற்றில் மிகப்பெரிய இழப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சந்திக்க நேரிடும். எனவே, பிசிசிஐ என்ன நினைக்கிறதோ, அதுதான் நடக்கும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.