துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடிவிட்டது. இனி தான் இந்திய அணிக்கு உண்மையான சாம்பியன்ஸ் டிராபி தொடங்குகிறது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேடிக்கையாக கூறி வருகின்றனர். ஏன் அப்படி சொல்கிறார்கள்? என பார்க்கலாம்.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. இந்த பிரிவில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் இந்தியா என 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி முதலில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடியது.

இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணிக்கு எந்த விதமான சவாலும் இருக்கவில்லை. மிக எளிதாகவே இந்த இரண்டு அணிகளையும் இந்திய அணி வீழ்த்தியது. முதலில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி 228 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.
வங்கதேசம் நிர்ணயித்த 229 ரன்கள் என்ற இலக்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் எட்டி வெற்றி பெற்றது இந்தியா. அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியை 241 ரன்கள் ஆல் அவுட் செய்தது. இந்த போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
இந்த இரண்டு போட்டிகளும் மிக எளிதாக அமைந்ததால் இவை பயிற்சி போட்டிகள் தான் அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி தான் இந்திய அணிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். எனவே, அது தான் உண்மையான சாம்பியன்ஸ் டிராபி என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் இந்திய அணியின் குரூப் சுற்று போட்டிகள் நிறைவுக்கு வருகிறது. அடுத்து இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்திய அணி அரை இறுதியில் வென்றால் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெறும். நியூசிலாந்து போட்டி, அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டி ஆகிய இந்த மூன்று போட்டிகளே இந்திய அணிக்கு உண்மையான சாம்பியன்ஸ் டிராபி என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.