துபாய்: விராட் கோலி சதம் அடிக்க கூடாது என்ற எண்ணத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி வைடு பந்துகளை வீசியது இந்திய ரசிகர்கள் மத்தியில் புகைச்சலை கிளப்பியது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முக்கியமான போட்டி துபாயில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 49.4 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணி சேசிங் செய்தபோது விராட் கோலி அபாரமாக ஆடினார். ரோஹித் சர்மா 20 ரன்களும், சுப்மன் கில் 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து இருந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி இணைந்து மிடில் ஓவர்களில் விரைவாக ரன் சேர்த்தனர்.

இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது விராட் கோலி சதத்தை நெருங்கி இருந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அக்சர் பட்டேல் களத்துக்கு வந்தார்.
அப்போது விராட் கோலியின் சதத்திற்கு 14 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்போது 42வது ஓவரில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி வேண்டுமென்றே இரண்டு வைடுகளை வீசினார். அதைப் பார்த்த ரசிகர்கள் கோபமடைந்தனர். அடுத்து மீண்டும் ஒரு பவுன்சர் பந்தை வீசினார். அது விராட் கோலியின் உயரத்திற்கு மேலே சென்றதை அடுத்து வைடு கொடுக்கப்பட்டது.
அந்த ஓவரில் மட்டும் மூன்று வைடுகள் சென்றன. அதனால் விராட் கோலி சதம் அடிக்க முடியாமல் போகக் கூடும் என்பதாலும், ஷஹீன் ஷா அப்ரிடி, கோலி சதத்தை அடிக்கக் கூடாது என வேண்டமென்றே இவ்வாறு செய்கிறார் என்பதாலும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
அந்த ஓவரின் முடிவில் விராட் கோலி 95 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அடுத்த ஓவரில் விராட் கோலி முதல் பந்தில் ஒரு சிங்கிள் ரன் எடுத்தார். அக்சர் பட்டேல் இரண்டாவது பந்தில் மற்றொரு சிங்கிள் ரன் எடுத்தார். மூன்றாவது பந்தில் விராட் கோலி ஒரு ஃபோர் அடித்து தனது சதத்தை நிறைவு செய்ததோடு இந்திய அணியின் வெற்றியையும் உறுதி செய்தார்.
இந்திய அணி 42.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாஹீன் ஷா அப்ரிடியின் செயலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் ஷாஹீன் ஷா அஃப்ரிடி மிக மோசமாக பந்து வீசி இருந்தார். அவர் எட்டு ஓவர்களில் 74 ரன்கள் கொடுத்து இருந்தார். இரண்டு விக்கெடுகள் வீழ்த்திய போதும் ஒரு ஓவருக்கு 9.2 ரன்கள் என்ற விகிதத்தில் ரன்களை வாரி இறைத்து இருந்தார்.