துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்த விராட் கோலி பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்திருக்கிறார். இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 241 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 42.3 ஓவர்களில் வெற்றிகரமாக சேஸ் செய்து முடித்தது. விராட் கோலி 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியிருக்கிறார். இந்தப் போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. இது விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் வாங்கும் 42வது ஆட்டநாயகன் விருது ஆகும்.

இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டி ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கர் 62 ஆட்டநாயகன் விருதுகளை வென்று இருக்கிறார். விராட் கோலி 42 ஆட்டநாயகன் விருதுகளை பெற்று இருக்கிறார்.
அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பை எனும் மூன்று வெவ்வேறு ஒருநாள் போட்டி தொடர்களில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி செய்திருக்கிறார். வேறு எந்த வீரரும் இந்த சாதனையை செய்ததில்லை.
மேலும் தற்போது சச்சின் டெண்டுல்கரின் அதிக சர்வதேச சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி நெருங்கி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 782 இன்னிங்ஸ்களில் 100 சதங்களை அடித்து இருக்கிறார். தற்போது விராட் கோலி 614 இன்னிங்ஸ்களில் 82 சர்வதேச சதங்களை அடித்து இருக்கிறார்.
தற்போது கிரிக்கெட் ஆடிவரும் வீரர்களில் அதிக சர்வதேச சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் விராட் கோலி 82 சதங்களுடன் முதல் இடத்திலும், ஜோ ரூட் 52 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், ரோஹித் சர்மா 49 சதங்களுடன் மூன்றாவது இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் 48 சதங்களுடன் நான்காவது இடத்திலும், கேன் வில்லியம்சன் 47 சதங்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
மேலும் ஐசிசி நடத்தும் ஒருநாள் தொடர்களில் அதிகபட்ச 50 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை சச்சின் டெண்டுல்கருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் 23 முறை ஐசிசி ஒருநாள் தொடர்களில் 50 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்களை அடித்து இருக்கின்றனர்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையும் விராட் கோலி செய்திருக்கிறார். முன்னதாக இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா பாகிஸ்தான் அணிக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் மட்டும் 188 ரன்களை அடித்திருந்தார். அந்த சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்திருக்கிறார்.
இது மட்டுமின்றி இந்தப் போட்டியில் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல் சாதனையையும் செய்தார். 14,000 ரன்களை விரைவாக அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். தற்போது உலக அளவில் 3 வீரர்கள் மட்டுமே சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14,000 ரன்களுக்கும் அதிகமாக அடித்துள்ளனர்.
ஒருவர் சச்சின் டெண்டுல்கர். அவர் ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் குவித்திருக்கிறார். இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா 14,234 ரன்கள் குவித்திருக்கிறார். விராட் கோலி தற்போது 14,085 ரன்கள் சேர்த்திருக்கிறார். அவர் விரைவில் சங்ககாராவின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.